போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய 3 இலங்கை தமிழர்கள் கைது
சென்னை:
போலி பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தி கொழும்புக்குச் செல்ல முயன்ற 2 பெண்கள் உள்பட 3 இலங்கைத்தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை-மட்டக்களப்பைச் சேர்ந்த மணீசுவரன் (31), முல்லைத் தீவைச் சேர்ந்த சதீஷ்குமாரின் மனைவி சுசிதா (28)மற்றும் அவருடைய மகள் ஷோபா (2) ஆகிய மூன்று பேரும் இந்தியா வந்திருந்தனர்.
மூன்று மாத சுற்றுலா விசாவில் வந்திருந்த அவர்கள் அந்தக் காலத்திற்கும் மேலாகவே தங்கியிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் மூவரும் திருச்சி விமானம் மூலம் கொழும்பு செல்ல முயன்றனர். அப்போதுஅவர்களுடைய பாஸ்போர்ட்டுகளைப் பரிசோதித்த போது அவை போலி பாஸ்போர்ட்டுகள் என்பது தெரியவந்தது.
மற்றவர்களின் பாஸ்போர்ட்டுகளில் தங்களுடைய புகைப்படங்களை ஒட்டி ஏமாற்றிய விவரமும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களைப் போலீசார் கைது செய்தனர். அவர்களைப் பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
போதைப் பொருள் - 3 இலங்கை நபர்கள் கைது:
இதற்கிடையே சென்னையில் போதைப் பொருள்களை வைத்திருந்த 3 இலங்கை நபர்கள் உள்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இலங்கையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் (26), ஷியாம் (20) மற்றும் முகமது ஆசாத் (42) மற்றும் சென்னையைச்சேர்ந்த லட்சுமி (63) ஆகிய நான்கு பேரையும் பாரிமுனை மூர் தெருவில் வடசென்னை கடற்கரைப் போலீசார் கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான பிரவுன் சுகர் என்ற போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட இலங்கை நபர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்தவிதமான முக்கிய ஆவணங்களும்இல்லை. அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.