திருச்சியில் விசாரணை கைதி மர்மச் சாவு: போலீஸ் அடித்துக் கொன்றதாக புகார்
திருச்சி:
திருச்சியில் விசாரணைக் கைதி போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து அவரது ஊர் மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சியையடுத்து ஐயம்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துவேல். இவர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்தார். இவரால் பலகுடும்பங்கள் நாசமாகியுள்ளன.
கடந்த 8ம் தேதி இவரை மனச்சநல்லூர் போலீசார் கள்ளசாராயம் காய்ச்சிய குற்றத்துக்காக கைது செய்தனர். திருச்சி மாஜிஸ்திரேட்முன் ஆஜர்படுத்தப்பட்ட இவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இவர் அடைக்கப்பட்டார். அங்கு இவரிடம் விசாரணை நடத்திய போலீசார் இவரைத்தாக்கியதாகத் தெரிகிறது.
மிகவும் உடல் நிலை தளர்ந்த நிலையில் இவர் கடந்த 14ம் தேதி திருச்சி அரசு மருத்துவனையில் போலீசாரால் சேர்க்கப்பட்டார்.ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
இதையடுத்து இவரை போலீசார் தான் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி ஐயம்பாளையத்ச்ை சேர்ந்த மக்களும் இவரதுஉறவினர்களும் நூற்றுக்கணக்கில் திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்து வந்துஅவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து விசாரணை நடத்துவதாகவும் உறுதியளித்து கூட்டத்தைக் கலைந்து போகச்செய்தனர்.
ஆனால், இந்த மரணத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அங்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே முத்துவேல் மூளைக் காய்ச்சல் காரணமாக இறந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.