தமிழகத்தை பிரிக்கும் ராமதாசின் கோரிக்கையை ஏற்க மாட்டோம்: வெங்கையா
சென்னை:
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமதாசின் கோரிக்கை எங்களுக்குஏற்புடையதல்ல என்று பா.ஜ.கவின் அகில இந்தியத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஒரு மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்றால் அதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பு தேவை.
மேலும் இது தொடர்பாக ஒரு தீர்மானத்தையும் மாநில சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும்.
மக்களின் முழு ஒத்துழைப்புடன் தான் சமீபத்தில் ஜார்க்கண்ட், உத்தராஞ்சல் மற்றும் சத்திஸ்கர் ஆகிய புதியமாநிலங்களை தேசிய ஜனநாயக முன்னணி அரசு உருவாக்கியது. இவற்றில் இரு மாநிலங்களின் சட்டசபைகளில்தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் தமிழக சட்டசபையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேறுவதற்கான வாய்ப்பே இல்லை.
மேலும் ராமதாசின் இந்தக் கோரிக்கை பா.ஜ.கவுக்கு ஏற்புடையதல்ல என்றார் வெங்கையா நாயுடு.
"வைகோ கைது தவறானது":
இதற்கிடையே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டது குறித்து வெங்கையா நாயுடுகூறுகையில்,
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக எம்.பியான வைகோவைக் கைது செய்தது ஒரு தவறான செயல்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காகவே பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக மதிமுகவினர் பேசினாலும் அந்தக் கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லைஎன்றார் வெங்கையா நாயுடு.
"அதிமுகவுடன் உறவில்லை":
இந்நிலையில் அதிமுகவுடன் எந்தவிதமான உறவும் பா.ஜ.கவுக்குக் கிடையாது என்றும் வெங்கையா நாயுடுகூறினார்.
இன்று காலை சென்னை வந்த வெங்கையா திமுக தலைவர் கருணாநிதியை அவருடைய வீட்டில் சந்தித்துப்பேசினார்.
மரியாதை நிமித்தமாகவே கருணாநிதியைச் சந்தித்ததாகக் கூறிய வெங்கையா, திமுகவுடன் தங்கள் உறவு நன்றாகஇருப்பதாகவும் கூறினார்.