காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு ரூ.10 லட்சம் ஜெ. பரிசு
சென்னை:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை அஞ்சு ஜார்ஜுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று ரூ.10 லட்சம் ஊக்கப் பரிசு அளித்தார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்று முடிவடைந்தன. எப்போதுமே இல்லாத அளவுக்கு இந்தியா இந்தப் போட்டிகளில் 32 தங்கம் உள்பட 72 பதக்கங்களை அள்ளிக் குவித்துள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான நீளம் தாண்டுதலில் 6.49 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றவர் அஞ்சு. கடந்த 1997 முதல் பல்வேறு போட்டிகளிலும் இந்தியாவுக்காக அவர் பதக்கங்களை வென்றுள்ளார்.
காமன்வெல்த்தின் வெண்கலப் பதக்கத்துடன் நேற்று சென்னை திரும்பிய அஞ்சுவுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு வந்த அஞ்சு அங்கு ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு ஊக்கப் பரிசாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை ஜெயலலிதா வழங்கினார்.
அஞ்சுவின் பயிற்சியாளரும் கணவருமான ராபர்ட் பாபி ஜார்ஜுக்கும் ஜெயலலிதா ரூ.1.50 லட்சத்திற்கான காசோலையை அளித்தார்.
மத்திய சுங்கத் துறையில் பணிபுரிந்து வரும் அஞ்சு தான் தற்போதைய காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த ஜூன் மாதம் நடந்த தேசிய பெடரேசன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அஞ்சு உள்ளிட்ட அதெலட்டிக்ஸ் வீரர்-வீராங்கனைகளுக்கும் இன்று ஜெயலலிதா ஊக்கப் பரிசுகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications