பொடாவின் கீழ் நெடுமாறன் கட்சிக்கு விரைவில் தடை?
சென்னை:
விடுதலைப்புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்போம் என்று கூறி வருவதால் பொடா சட்டத்தின் கீழேயே தமிழர் தேசிய இயக்கத்தைத் தடை செய்ய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே மதிமுக பொதுச் செயலாளரான வைகோவைக் கைது செய்து சிறைக்கு அனுப்பிய போது, மதிமுகவை விரைவில் தடை செய்வது குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வோம் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஆனால் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் மதிமுகவைத் தடை செய்வதில் நிறைய சட்டச் சிக்கல்கள் உள்ளதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து இந்தத் தடை பற்றி ஜெயலலிதா கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளார்.
இருந்தாலும் முதற்கட்டமாக மத்திய அரசில் அங்கம் வகித்துள்ள மதிமுக அமைச்சர்களான கண்ணப்பன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரைப் பதவியிலிருந்து தூக்குவதற்கான நடவடிக்கைகளில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவாக கண்ணப்பன் தொடர்ந்து பேசி வருவதால் அவரை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கும் துணைப் பிரதமர் அத்வானிக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனைக் கைது செய்த பின்னர் இவ்வியக்கத்தைத் தடை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவதால் இந்த இயக்கத்தைத் தேச விரோத இயக்கமாக அறிவித்து அதைத் தடை செய்வதற்கான முயற்சிகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
பொடா சட்டத்தின் 16வது பிரிவின் படி தமிழர் தேசிய இயக்கத்தைத் தடை செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. இதே பிரிவைப் பயன்படுத்தித் தான் ஏற்கனவே ஜிகாத் கமிட்டி, அல்-உம்மா, தமிழர் தேசிய விடுதலைப் படை மற்றும் தமிழர் மீட்சிப் படை ஆகிய தீவிரவாத இயக்கங்களை தமிழக அரசு தடை செய்துள்ளது.
மேலும் தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்களை ஆதரித்து பேசினாலோ எழுதினாலோ அந்த இயக்கங்களைத் தடை செய்யலாம் என்று சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு 3வது பிரிவு கூறுவதாகவும் தமிழக அரசு கூறி வருகிறது.
இதன்படி விரைவில் தமிழர் தேசிய இயக்கத்தைத் தடை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அதை வைத்துக் கொண்டே மதிமுகவையும் தடை செய்ய நினைத்துள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications