சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பால் இறந்த மும்பை பெண்
சென்னை:
மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த 55 வயதுப் பெண் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையைச் சேர்ந்தவர் தாக்கர். இவரது கணவர் மும்பையில் உள்ளார். சென்னைக்கு ஒரு வேலையாக வந்த தாக்கர் மீண்டும் மும்பை செல்ல விமான நிலையத்திற்கு வந்தார்.
இரவு 10 மணிக்கு விமானம் புறப்பட இருந்தது. அதற்கு முன்பாகவே வந்து விட்ட தாக்கர் பாதுகாப்பு சோதனைகளுக்காக நின்று கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார்.
உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் நிலைய டாக்டரை வரவழைத்தனர். அவர் வந்து பரிசோதித்து விட்டு, மாரடைப்பு காரணமாக தாக்கர் இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து சென்னையில் உள்ள தாக்கரின் உறவினர்கள் மற்றும் மும்பையில் உள்ள அவரது கணவர் ஆகியோருக்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தாக்கரின் திடீர் மரணம் காரணமாக விமானம் புறப்படுவது சிறிது நேரம் தாமதம் ஆனது.