சென்னை ரயில் நிலையத்தில் உ.பி. மாணவி தற்கொலை
சென்னை:
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளம் மாணவி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ரயில் நிலையக் கழிவறையைச் சுத்தம் செய்யும் பெண் ஊழியர் அங்கே சென்றார்.
அப்போது ஒரு இளம் பெண் அங்குள்ள குடிநீர் குழாயில் தன்னுடைய துப்பட்டாவைக் கட்டி அதில் பிணமாகத் தொங்கினார்.
இதைப் பார்த்ததும் அந்தப் பெண் ஊழியர் அதிர்ச்சி அடைந்து ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சென்று அந்தப் பெண்ணின் உடலை மீட்டனர். அவர் வைத்திருந்த ஒரு கைப்பையில் அவருடைய பி.ஏ. சான்றிதழும் ஒரு டைரியும் கிடைத்தது.
ஆனால் அந்த டைரியில் எழுதப்பட்டிருந்த முகவரியும் டெலிபோன் எண்ணும் பேனா மையால் சுத்தமாக அழிக்கப்பட்டிருந்தது. பிறகு நீண்ட நேரம் தேடிய பின் ஒரு டெலிபோன் எண்ணைப் போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த எண்ணைக் கொண்டு அந்தப் பெண்ணின் பெற்றோரைப் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிய போது தான் அந்தப் பெண் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜான்கிலதா என்பது தெரிய வந்தது.
ஒரு வாரத்திற்கு முன் பெற்றோருடன் சண்டை போட்டு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஜான்கிலதா வெளியேறி சென்னை வந்துள்ளதாகத் தெரிகிறது.
அவருடைய பெற்றோர் போனில் பேசும் போது சரியாகவே பேசாமல் அழுது கொண்டே இருந்தனர். இதையடுத்து அவர்களை உடனடியாக சென்னை வருமாறு போலீசார் அழைத்தனர்.
அவர்கள் வந்த பிறகு தான் ஜான்கிலதாவின் தற்கொலைக்குக் காரணம் தெரிய வரும்.