ரஜினி வீட்டில் திருடிய கொள்ளையன் சுட்டுக் கொலை
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல வி.ஐ.பிக்களின் வீடுகளில் திருடி கைதான கொள்ளையன் இன்று காலை போலீசாரைத் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்ப முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டான்.
புதுக்கோட்டையை அடுத்த உடையார்பாளையத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவன் பல வருடங்களாகவே சென்னையில் வீடுகளில் கொள்ளையடித்து வந்தான். தனி மனிதனாகவே சென்று வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ளவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து திருடுவதில் அவன் வல்லவன்.
ரஜினிகாந்த், ஐ.ஏ.எஸ். அதிகாரியான பால்ராஜ், வழக்கறிஞர் காந்தி ஆகியோரின் வீடுகள் உள்பட பல முக்கியப் புள்ளிகளின் வீடுகளிலும் அவன் கொள்ளையடித்துள்ளான். 43 வீடுகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளையும் பணத்தையும் அவன் கொள்ளையடித்துள்ளான்.
ஏற்கனவே மூன்று முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தான். இந்நிலையில் கடந்த மாதம் முருகேசன் போலீசாரிடம் மீண்டும் பிடிபட்டான். அவனிடமிருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நகைகளையும் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
அவனிடம் நடத்திய தீவிர விசாரணையின் போது பால்ராஜின் வீட்டில் கொள்ளையடித்த கைத்துப்பாக்கியை அடையாறு அருகே உள்ள ஊரூர் குப்பத்தில் பதுக்கி வைத்திருப்பதாக முருகேசன் போலீசாரிடம் கூறினான்.
அந்தத் துப்பாக்கியை மீட்பதற்காக அவனை அழைத்துக் கொண்டு இன்று அதிகாலை ஊரூர் குப்பத்துக்குப் போலீசார் சென்றனர்.
குறிப்பிட்ட இடத்தில் பூமிக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்த முருகேசன், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தத் துப்பாக்கியைக் கொண்டே போலீசாரை நோக்கிச் சுட ஆரம்பித்தான். சுட்டுக் கொண்டே தப்பி ஓடவும் அவன் முயற்சித்துள்ளான்.
அவன் சுட்டதில் பாலகிருஷ்ண பிரபு என்ற சப்-இன்ஸ்பெக்டரின் கையில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரான ராமமூர்த்தி பதிலுக்கு அவனை நோக்கி துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார்.
இதில் தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்து சுருண்டு விழுந்தான் முருகேசன். பின்னர் அவன் சந்தோஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முருகேசன் இறந்தான்.
அவன் சுட்டதில் ராமமூர்த்தியும் மற்றொரு போலீஸ்காரரும் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கொள்ளையடித்து பணத்தில் புதுக்கோட்டையில் பல ஏழைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளான் முருகேசன். தனது நண்பனை கவுன்சிலர் தேர்தலில் நிற்க வைத்து பணத்தைக் கொட்டி ஜெயிக்கவும் வைத்துள்ளான். கொள்ளையடித்தே லட்சாதிபதியாக வாழ்ந்து வந்தான் இவன்.
முருகேசன் தன்னுடைய 15 வயதிலிருந்தே திருட்டுத் தொழிலை ஆரம்பித்ததாகவும் அவன் மீது 76 கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் நிருபர்களிடம் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications