சென்னை மாநகராட்சியில் போட்டிக் கூட்டம் நடத்திய திமுக
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தை துணை மேயர் கராத்தே தியாகராஜன் ஒத்தி வைத்த பிறகு திமுகவினர் தாங்களாகவே போட்டிக் கூட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இன்று மாநகராட்சிக் கூட்டம் கூடியவுடன் சென்னையில் உள்ள கண்ணப்பர் திடலை மீன்கள் ஏலம் விடுவதற்கு ஒதுக்கியது தொடர்பாக திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த திடலை மீன் ஏலத்துக்கு ஒதுக்கியதில் அதிமுகவினர் பெரும் பணத்தை லஞ்சமாக வாங்கியுள்ளதாக திமுகவினர் கூறினர். இது தொடர்பாக ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வருவதாக திமுக கவுன்சிலர் மலையன் கூறினார்.
இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி மலையன் ஒத்தி வைப்புத் தீர்மானத்தைப் படித்தார்.
அவரை பேச விடாமல் அதிமுகவினர் கெட்ட வார்த்தைகளில் திட்டினர். பதிலுக்கு திமுகவினரும் மோசமான வார்த்தைகளால் அதிமுகவினரை அர்ச்சனை செய்தனர்.
இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சில கவுன்சிலர்கள் நாற்காலிகள் மீது ஏறி நின்று கெட்ட வார்த்தைகளில் திட்டினர். பதிலுக்கு சில கவுன்சிலர்கள் மேஜை மீதே ஏறி ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர்.
அவையில் கெட்டவார்த்தை மழை பெய்தது. சில கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளியும் விட்டனர். லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அடிதடி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
நிலைமை மிகவும் மோசமாவதை உணர்ந்த துணை மேயர் கராத்தே தியாகு அவையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு எழுந்து சென்றார். அவரைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளியேறினர்.
ஆனால், திமுகவினர் வெளியேவில்லை. தங்கள் கட்சியின் கவுன்சிலர் மலையன் தலைமையில் திமுகவினர் போட்டியாக மாநகராட்சி மன்றக் கூட்டத்தை நடத்தினர்.
அவர்களை அவையை விட்டு வெளியேற்ற சில அதிமுக கவுன்சிலர்கள் மீண்டும் அவைக்குள் வந்தபோது மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஆரம்பித்தது. இதையடுத்து அதிமுகவினர் அவையை விட்டு ஓடிவிட்டனர்.