சோனியா வருகை: மதுரையில் கருப்புப் பூனைப் படை டி.ஜி.பி. ஆய்வு
மதுரை:
மதுரையில் காங்கிரஸ்- த.மா.கா. இணைப்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்வதையடுத்து இந்த விழா நடக்கவுள்ள தமுக்கம் மைதானத்தைப் பார்வையிட டெல்லியில் இருந்து சிறப்புப் பாதுகாப்புப் படையினர் மதுரை வந்தனர்.
கருப்புப் பூனைப் படையின் டி.ஜி.பியான பட்நாயக் தலைமையிலான அதிகாரிகள், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் மதுரையில் இந்த மைதானத்தைப் பார்வையிட்டனர்.
அவர்களுடன் மதுரை வந்த த.மா.கா. தலைவர் வாசனுடனும் ஆலோசனை நடத்தினர். பின்னர் மதுரை நகர காவல்துறை அதிகாரிகளும் இந்தக் குழுவினரைச் சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர்.
தமுக்கம் மைதானம் தவிர வேறு சில மாற்று இடங்களையும் அதிகாரிகள் பார்வையிட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
சோனியா காந்திக்கு பிரதமருக்கு இணையான மிக அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அரங்குகளில் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
அதோடு நூற்றுக்கணக்கான உளவுப் பிரிவினரும் பாதுகாப்புப் பணிகளில் மறைமுகமாக ஈடுபடுகின்றனர்.