அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள ஜெ.-வாழப்பாடி சந்திப்பு
சென்னை:
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தி முதல்வர் ஜெயலலிதாவை திடீரென்று நேற்று கோட்டைக்குச் சென்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் லேசான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத தலைவராக இருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. ஜெயலலிதாவின் வலது கரம் என்று கூறப்படும் வகையில், அவரது தீவிர விசுவாசியாக இருந்தவர்.
காலப் போக்கில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சொந்தக் கட்சி ஆரம்பித்தார். அர்ஜூன் சிங் தொடங்கிய கட்சியில் சிறிது காலம் இருந்தார். கடைசியாக தமிழக ராஜிவ் காங்கிரஸ் என்ற பெயரில் ஒரு கட்சியை நடத்தி வந்தார்.
பின்னர் கட்சியைக் கலைத்துவிட்டு சமீபத்தில் தான் சோனியாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனாலும் அவருக்கு எந்தப் பதவியும் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அவரது வலது கரமாக திகழ்ந்து வந்த கிள்ளிவளவன் காங்கிரஸ் கோஷ்டிப் பூசலில் சிக்கி திடீரென்று இளங்கோவன் ஆதரவாளராக மாறினார். இது வாழப்பாடிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே சமீபத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக கூறி வாழப்பாடி ராமமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பினார் இளங்கோவன்.
இந்தச் சூழ்நிலையில் தான் ஜெயலலிதாவைச் சந்தித்துள்ளார் வாழப்பாடி. அந்தச் சந்திப்பின் போது சட்டசபை காங்கிரஸ் தலைவர் யசோதாவும் உடனிருந்தார்
.இந்தச் சந்திப்பை மரியாதை நிமித்தமான ஒன்று என்று முதல்வர் அலுவலகமும் வாழப்பாடியும் கூறினாலும் தற்போதைய சூழ்நலையில் இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
""தமிழகத்தில் பொடா சட்டத்தை துணிச்சலுனுடன் செயல்படுத்தும் ஜெயலலிதாவைப் பாராட்டினேன். ஜெயலலிதாவின் நண்பராக இருந்த நான் இடையில் சில காலம் வேறு முகாம்களில் இருந்துள்ளேன். தற்போது மீண்டும் நண்பராகி வருகிறேன்"" என்று வாழப்பாடி கூறியுள்ளார்.
இவருடைய போக்கைப் பார்த்தால் எந்த நேரத்திலும் அவர் அதிமுகவில் இணைந்து விடுவாரோ என்றும் அரசியல் வட்டாரத்தில் கேள்விக் குறியோடு பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications