தமிழகத்துக்கு தண்ணீர் விட கர்நாடகத்துக்கு மீண்டும் உத்தரவு
டெல்லி:
டெல்லியில் நேற்று நடந்த காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் எனகர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், தண்ணீர் இருக்கிறதா என்பதைப் பார்த்த பின்னரே இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கர்நாடகம் கூறியுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் ஆணைப்படி வழக்கமாக ஆண்டுதோறும் தமிழகத்துக்கு விட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தரவில்லை.இதையடுத்து அதிகாரம் இல்லாத இந்த நடுவர் மன்றத்தையும், காவிரிக் கண்காணிப்புக் குழுவையும் புறக்கணிப்பது என்று தமிழக அரசுமுடிவு செய்தது.
ஆனால், காவிரி நதி நீர் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல இந்தக் குழு கூடி நிலைமையை ஆராய வேண்டும் என்றும் பிரதமர் தலைமையிலான நதி நீர் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து டெல்லியில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் கோஸ்வாமி தலைமையில் நேற்று நடந்த காவிரிக் கண்காணிப்புக் குழுவின்அவசரக் கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்றது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், கர்நாடக தலைமைச் செயலாளர் ரவீந்திரா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
சுமார் மூன்றரை மணி நேரம் காரசாரமாக நடந்த இந்தக் கூட்டத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்குகண்காணிப்புக் குழு உத்தரவிட்டது. அதே போல இரு மாநில அணைக் கட்டுகளிலும் உள்ள நீரின் அளவு குறித்து மாதந்தோறும் ஆராய்ந்துஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
கூட்டம் முடிந்த பின்னர் கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் ரவீந்திரா கூறுகையில், கர்நாடகத்தின் அணைக்கட்டுகளில் உள்ள நீரின்அளவு குறித்து கணக்கிட்ட பின்னர் தான் இந்த உத்தரவை ஏற்பதா இல்லையா என்று முடிவு செய்யப்படும் என்றார்.
மத்திய நீர் வளத்துறை செயலாளர் கோஸ்வாமி கூறுகையில், இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் பிரதமர் வாஜ்பாயிடம்அறிக்கையாக தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையின் அடிப்படையில் காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவரான பிரதமர் இந்தவிவகாரத்தில் இறுதி முடிவெடுப்பார் என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி பிரதமரின் முடிவை இரு மாநிலங்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.