பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தன
டெல்லி:
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் கடந்த சில மாதங்களாகத்தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தன.
இந்நிலையில் இவற்றின் விலைகளை மத்திய அரசு நேற்று குறைத்தது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது.
ஒரு லிட்டருக்கு சுமார் 21 பைசாக்கள் வரை இவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
புதிய விலைப் பட்டியலின்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.31.44 (பழைய விலை ரூ.31.64)ஆகும். டெல்லியில் ரூ.29.00 (ரூ.29.18), கொல்கத்தாவில் ரூ.29.44 (ரூ.29.63) மற்றும் மும்பையில் ரூ.33.44(ரூ.33.64) ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல் ஒரு லிட்டர் டீசல் சென்னையில் ரூ.19.86 (ரூ.20.06), டெல்லியில் ரூ.18.05 (ரூ.18.23),கொல்கத்தாவில் ரூ.18.43 (ரூ.18.61) மற்றும் மும்பையில் ரூ.22.95 (ரூ.23.16) என விற்கப்படுகிறது.