ரசிகர்களை தூண்டி விடுகிறார் ரஜினி: பாமக
சென்னை:
பாபா படம் நன்றாக இல்லாத காரணத்தால் ரசிகர்களைத் தூண்டி விட்டு படத்திற்கு விளம்பரம் சேர்க்கிறார் நடிகர்ரஜினி என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாபா படம் நன்றாக இல்லை என்பதை அவரது ரசிகர்களேகூறுகின்றனர். பரபரப்பு இல்லாவிட்டால் படத்தை ஓட்ட முடியாது என்பதால் பாட்டாளி மக்கள் கட்சியினருக்குஎதிராக வன்முறையில் ஈடுபடுமாறு நடிகர் ரஜினி காந்த் தனது ரசிகர்களைத் தூண்டி விட்டுள்ளார்.
தனது ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு அவர் உடனடியாக வேண்டுகோள் விட வேண்டும். இல்லாவிட்டால்பாமகவினர் என்ன செய்வார்கள் என்று தெரியாது.
சரத்குமார் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் மைசூர் அருகே தாக்கப்பட்டபோது அதை அத்தனை தமிழ் நடிகர்களும்கண்டித்தனர். ஆனால் ரஜினி வாயே திறக்கவில்லை.
ஆனால் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றதை மட்டும் கடுமையாக கண்டித்துள்ளார். ஏன் இந்தபாகுபாடு?
தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு, தமிழர்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரஜினி, தமிழர்களுக்காகஎன்ன செய்துள்ளார்?
கன்னடத்தில் வந்த எச்.டூ. ஓ (H20) என்ற படத்தில் ஆங்காங்கே சில தமிழ் வார்த்தைகள் வந்த காரணத்தால், அந்தப்படத்தை ராஜ்குமார் மனைவி பர்வதம்மா தலைமையில் கன்னட வெறியர்கள் கடுமையாக எதிர்த்து பெரும்போராட்டம் நடத்தினர். அந்தப் படத்தில் இருந்த தமிழ் வசனங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன.
அப்போது இந்த ரஜினி எங்கே போனார். அப்போது இவர் வாயில் என்ன வைத்திருந்தார்? இப்போது அந்தராஜ்குமாருக்காக வக்காலத்து வாங்கியிருக்கிறார் ரஜினி.
பாபா படத்திற்கு விளம்பரம் தேடுவதற்காக டாக்டர் ராமதாஸை அவமதிக்கும் செயலை அவரது ரசிகர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை ரஜினி தனது ரசிகர்களிடம் கூற வேண்டும்.
இல்லாவிட்டால் எங்கள் பொறுமை எல்லை இழக்கும், பிறகு என்ன நடக்கும் என்பது எங்களுக்கே தெரியாதுஎன்று கூறியுள்ளார் மணி.
பாபா திருட்டில் தொடர்பு இல்லை:
இதற்கிடையே ஜெயங்கொண்டத்தில் தியேட்டரில் இருந்து பாபா படப் பெட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் எனக்கோ அல்லது பாட்டாளி மக்கள்கட்சிக்கோ கொஞ்சம் கூட தொடர்பு இல்லை என்று பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு கூறியுள்ளார்.
பாமக தலைவர் டாக்டர் ராமதாஸின் வலது கரம் என்று வர்ணிக்கப்படுபவர் காடுவெட்டி குரு. ராமதாஸ் சொல்லும் செயல்களை உடனடியாகநிறைவேற்றுபவர் என்று இவருக்குப் பெயர் உண்டு. ஜெயங்கொண்டத்தில் உள்ள தியேட்டரில் புகுந்த ஒரு கும்பல் பாபா படப் பெட்டியைத் தூக்கிச் சென்றது.
இந்த நிலையில் தனக்கோ அல்லது பாமகவினருக்கோ இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று காடுவெட்டி குரு கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில், பாபா படப் பெட்டியை இருட்டில் சென்று திருட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அந்த அளவுக்குகோழைகளும் அல்ல நாங்கள். இதில் எனக்கோ அல்லது பாமகவினருக்கோ தொடர்பு கிடையாது. இதுகுறித்து போலீஸார்தான் விசாரணை நடத்திஉண்மையைக் கொண்டு வர வேண்டும் என்றார்.
இதற்கிடையே இச் சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.