திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து 2 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலி
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே கார் தலைகீழாகக் கவிழ்ந்ததில் பெங்களூரில் பணிபுரிந்து வந்த 2 சாப்ட்வேர்இன்ஜினியர்கள் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமமூர்த்தி.இவருடைய மகன் ராஜேஸ்வரனும் (25) அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் பிரதீப்பும்(24) பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்த இருவரும் தங்களுடன் பணிபுரியும் சந்தியா (25) மற்றும் சைதன்யா (25) ஆகியோருடன் ஒருகாரில் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது மோதாமல்இருப்பதற்காக கார் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார்.
இதனால் அந்தக் கார் நிலை தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்தது.
இதில் காரில் பயணம் செய்த நான்கு பேருமே காயமடைந்தனர். உடனே நால்வரும் திண்டிவனம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் ராஜேஸ்வரனும் பிரதீப்பும் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இருந்தாலும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த சந்தியாவும் சைதன்யாவும் திண்டிவனம் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இவ்விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.