இலங்கைக்கு மீண்டும் வர ஆரம்பித்துள்ள சுற்றுலா பயணிகள்
கொழும்பு:
இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்து அமைதியும் திரும்ப ஆரம்பித்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கையின் முக்கிய தொழில்துறையாக இருந்தது சுற்றுலா. ஆண்டுதோறும் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குவந்துகொண்டிருந்தனர். ஆனால், இனக் கலவரம் மற்றும் போர் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வரத்து பெருமளவு குறைந்தது.
மேலும் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் மீது புலிகள் நடத்திய மிகப் பெரிய தாக்குதலில் பல்வேறு விமானங்களையும் இலங்கைஇழந்தது. இதனால் சுற்றுலாத்துறை மிகப் பெரும் இழப்பைச் சந்தித்தது.
இந் நிலையில் கடந்த டிசம்பரில் ஆரம்பித்த போர் நிறுத்தம் நாட்டில் அமைதி திரும்பச் செய்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளும்இலங்கைக்கு மீண்டும் வர ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையின் கிழக்குக் கடற்கரை அதன் வெண் மணலுக்காகவும், சுத்தமான கடல் நீருக்காகவும், எழிலான சூழலுக்காகவும் மிகவும்விரும்பப்படுவதாகும். இந்தக் கடற்கரைக்கு ஐரோப்பிய நாட்டுப் பயணிகள் ஆண்டுதோறும் வருவதுண்டு.
கடந்த பல ஆண்டுகளாக நின்று போயிருந்த இந்த பயணிகளின் வரவு மீண்டும் அதிகரித்துள்ளது. திரிகோணமலை கடற் பகுதிக்கும்சுற்றுலாப் பயணிகள் வரத்து கூடி வருகிறது. இப்போது இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பான்மையினர் இந்தியர்கள்.
இந் நிலையில் இந்திய சுற்றுலாப் பயணிகளைக் கவர இலங்கை புதிய திட்டங்களைத் தீட்டி வருகிறது. இந்தியர்களுக்கு விசா வழங்குவதில்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. நாட்டில் வந்து இறங்கிய பின்னர் 30 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க விசா வாங்கிக்கொள்ளலாம்.
முக்கிய ஹோட்டல்களிலும் சுற்றுலாத்துறையின் விடுதிகளிலும் இந்தியர்களுக்கு கட்டணக் குறைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அதிகாரி மதுபனி பெரைரா கூறினார்.
கண்டியில் உள்ள புத்தரின் பல்லை வணங்க உலகின் பல்வேறு நாட்டு புத்த மதத்தினரும் இலங்கைக்கு வருவதுண்டு. இனக் கலவரமும்போரும் இவர்களையும் வரவிடாமல் தடுத்தது. இப்போது இவர்களும் இலங்கை வர ஆரம்பித்துவிட்டனர்.
மொத்தத்தில் இலங்கைக்கு, குறிப்பாக சுற்றுலாத்துறைக்கு, மறுவாழ்வு ஆரம்பித்திருக்கிறது.