வி.பி. சிங் உதவியுடன் டெல்லியில் கட்டப்படும் பெரியார் மையம்
டெல்லி:
டெல்லியில் பெரியார் மையத்தின் கட்டடத்தை அம் மாநில நகர வளர்ச்சிக் குழுமம் உடைத்ததையடுத்து அங்கு ரூ. 6 கோடி செலவில் புதியபெரியார் மையத்தைக் கட்ட திராவிடர் கழகம் திட்டமிட்டுள்ளது.
பாம்நொலி பகுதியில் இருந்த பெரியார் மையக் கட்டம் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி டெல்லி அரசு தகர்த்தது.ஆனால், இதை திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த விவகாரத்தை கி.வீரமணியோடு சேர்ந்து கையில் எடுத்துப் போராடியவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தான். கட்டடஇடிப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய அவர் சமீபத்தில் வீரமணியை அழைத்துக் கொண்டு பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தார். உடனேபெரியார் மையம் கட்ட மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என வாஜ்பாயிடம் வலியுறுத்தினார் சிங்.
இதையடுத்து டெல்லியில் உடனே மாற்று நிலம் ஒதுக்க நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருக்கு வாஜ்பாய் உத்தரவிட்டார். நகர்ப்புறவளர்ச்சித்துறை அமைச்சர் டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் பேசி தெற்கு டெல்லியில் மதுரா-நொய்டா சாலையில் ஜெசோலாஎன்ற இடத்தில் 1 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது.
நிலத்தை ஒதுக்க டெல்லி ஆளுநருடனும் வி.பி.சிங் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்தில் ரூ. 1.96 கோடி செலவில் பெரியார் மையம், கம்ப்யூட்டர் கல்வி மையம், நூலகம், பெரியார் பண்பாட்டு மையம், எம்.பி.ஏ.,எம்.சி.ஏ. மாணவர்களுக்கு தங்கும் விடுதி, உணவு விடுதி, கான்ப்ரன்ஸ் ஹால் ஆகியவை அமைக்கப்பவுள்ளன. இந்தக் கட்டடத்தின்கட்டுமானப் பணியை நேற்று வி.பி.சிங் துவக்கி வைத்தார்.
10 மாடிகள் கொண்ட பிரம்மாண்டமான கட்டடமாக இது உருவாகும் என உடன் இருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிதெரிவித்தார். முதல்கட்டமாக ரூ. 6 கோடி செலவில் 4 மாடிகள் கொண்ட கட்டடம் கட்டப்படுகிறது.