தேர்தல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கலாம் ஒப்புதல்
டெல்லி:
எந்தவிதமான திருத்தமும் செய்யாமல் மத்திய அரசு அனுப்பிய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் திருத்த மசோதாவுக்குஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஒப்புதல் அளித்து விட்டார்.
தேர்தலில் போட்டியிடும் ஒருவர் ஏதாவது வழக்கில் தண்டனை பெற்றிருந்தால் அது குறித்த விவரங்களை தேர்தல்கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறையைத் தளர்த்தி இவ்விவரங்களைத் தேர்தல் கமிஷனுக்குத்தெரிவிக்க வேண்டியதில்லை என்று மத்திய அரசு சமீபத்தில் ஒரு புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
இதை கடந்த வாரம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பியது. ஆனால், இந்தச் சட்டம் கிரிமினல்குற்றம் செய்த அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக இருப்பதால் அதில் கையெழுத்திட மறுத்த டாக்டர் கலாம் அதற்குவிளக்கம் கேட்டு மத்திய அரசுக்கே இந்தச் சட்டத் திருத்தத்தைத் திருப்பி அனுப்பி விட்டார்.
வழக்கில் தண்டனை பெற்ற வேட்பாளர் அந்த விவரத்தை தேர்தல் கமிஷனிடம் ஏன் தெரிவிக்கக் கூடாது என்றும்அதை ஏன் வேண்டாம் என்று நினைக்கிறீர்கள் என்றும் கேட்டு அதைத் திருப்பி அனுப்பினார் கலாம்.
தாங்கள் சொல்லும் இடத்தில் ஜனாதிபதி கையெழுத்துப் போடுவார் என்று நினைத்திருந்த மத்திய அரசுக்கு இதுபெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்குதல் கொடுத்து அதில் கையெழுத்து வாங்க மத்திய அமைச்சரவை நேற்றுமுடிவு செய்து, அந்தச் சட்டத் திருத்தத்தில் எந்தவிதமான திருத்தத்தையும் செய்யாமலேயே மீண்டும் டாக்டர்கலாமுக்கே திருப்பி அனுப்பியது.
இந்நிலையில் மத்திய அரசு எதிர்பார்த்த படியே டாக்டர் கலாம் இன்று அந்தச் சட்டத் திருத்தத்தில் கையெழுத்துப்போட்டு அதற்கு ஒப்புதல் அளித்து விட்டார்.
இவ்வாறு மத்திய அரசு மீண்டும் அனுப்பும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஒருமுறை தான் ஜனாதிபதியால்மறுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் அந்த மசோதாவைக்கிடப்பில் போடும் உரிமையும் ஜனாதிபதிக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் பிரச்சனையை மேலும் வளர்க்க விரும்பாததால் இந்தச் சட்டத் திருத்த மசோதாவில் கையெழுத்துப்போட்டு அதற்கு ஒப்புதல் அளித்து விட்டார் டாக்டர் கலாம்.