வீரப்பனை பிடிக்க மத்திய படைகளை அனுப்ப தயார்: அத்வானி
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிக்க மத்தியப் படைகளை அனுப்பத் தயார் என துணைப் பிரதமர் அத்வானி கூறினார்.
இன்று பெங்களூர் வந்த அவரை விமான நிலையத்திலேயே கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே சந்தித்துப் பேசினார்.வீரப்பன் விவாகரத்தை மாநில அரசுகளால் கையாள முடியாததால் மத்தியப் படைகளின் உதவியைக் கோரினார். மேலும் விநாயகர்சதுர்த்தி, தசரா ஆகிய நிகழ்ச்சிகள் வருவதால் இந்தக் கடத்தல் விவகாரம் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கலாம் என அஞ்சுவதாகவும்கார்கே கூறினார்.
இந்த திருவிழாக்களை ஒட்டி நடக்கும் ஊர்லங்களின்போது தமிழர்கள் மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது குறித்தும் இருவரும்விவாதித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய அத்வானி, வீரப்பனின் கடத்தல்கள் தேசிய அளவில் பிரச்சனையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன.வீரப்பன் விவகாரம் இனியும் கர்நாடகம், தமிழகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இந்த மாநிலங்களில் செயல்பட்டாலும் கூட அவன் ஒருதேசப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளான்.
மாநில அரசுகள் எப்போது உதவி கேட்டாலும் மத்திய அரசு உதவத் தயாராக உள்ளது. இப்போதும் உதவி செய்ய நாங்கள் தயார்.வீரப்பனைப் பிடிக்க மத்தியப் படைகளை அனுப்பத் தயார் என்றார் அத்வானி.
மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், தசரா, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் நடக்கும் நிலையில் இந்தக் கடத்தல் நடந்துள்ளது.இதனால் மாநிலத்துக்கு கூடுதல் மத்தியப் படைகளை பாதுகாப்புக்கு அனுப்புமாறு கேட்டேன்.
வீரப்பனைப் பிடிக்க கமாண்டே படையினரை அனுப்புமாறும் கேட்டுள்ளேன். அத்வானியிடம் கடிதமும் கொடுத்தேன்.
கூட்டு அதிரடிப் படையின் தலைவர் வால்டர் தேவாரம் தலைமையில் வீரப்பனைப் பிடிக்கும் பணி தொய்விலலாமல் நடந்து வருகிறது.அதிரடிப்படை தனது கடமையைச் செய்கிறது. அதில் மாநில அரசு தலையிடாது என்றார்.
வீரப்பனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்று கேட்டபோது, இப்போது நாகப்பாவை மீட்பதில் மட்டும் தான் கவனம் செலுத்திவருகிறோம் என்று பதிலளித்தார்.
தூதரை அனுப்பவீர்களா என்று கேட்டபோது, நாகப்பாவை விடுவிக்க அதிகாரிகளைக் கொண்டு தான் முயற்சிக்கப் போகிறோம் என்றார்.இதன்மூலம் தூதுவர்களாக பொதுவான யாரையும் அனுப்பப் போவதில்லை என்பதை கார்கே சுட்டிக் காட்டியுள்ளார்.