ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: கர்நாடக முதல்வர்
பெங்களூர்:
தமிழக பத்திரிக்கையாளர்கள் மற்றும் பழ.நெடுமாறனின் நெருக்குதலால் தான் கர்நாடக அதிரடிப்படையின் தலைவர் கெம்பைய்யாமாற்றப்பட்டார் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா கோபத்துடன் மறுத்தார்.
நேற்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தார். கெம்பைய்யா மாற்றப்பட்டதால் தான்வீரப்பனுக்கு தெம்பும், துணிவும் ஏற்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
இந் நிலையில் ஜெயலலிதாவின் இக் குற்றச்சாட்டை கிருஷ்ணா மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,
ஒரு அதிகாரியை மாற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. அதில் யாரும் தலையிட முடியாது. தமிவக பத்திரிக்கையாளர்கள் என்னைச்சந்தித்தபோது வீரப்பன் குறித்தோ, அதிரடிப்படை குறித்தோ எதுவும் பேசவில்லை.
பத்திரிக்கை சுதந்திரத்தை அதிரடிப்படைகள் அடக்குவதாகக் கூறி மனு தந்தார்கள். அவர்களது கருத்தை நான் ஒப்புக் கொண்டேன்.அவ்வளவு தான். கெம்பைய்யாவை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கூறியதாக ஜெயலலிதா கூறுவது மிகவும் தவறான தகவல்.
டெல்லியில் காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நான் வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசின் உதவியைக் கோருவேன். இதுதொடர்பாக பிரதமருடன் பேசுவேன் என்றார் கிருஷ்ணா.