சென்னையில் போலீசார் தாக்குதல்: வக்கீல் காது கிழிந்தது
சென்னை:
சென்னையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தின் போது போலீசார் திடீர் தாக்குதல் நடத்தியதில் ஒரு வழக்கறிஞரின்காது கிழிந்து அவருக்கு பயங்கர ரத்தக் காயம் ஏற்பட்டது.
நீதிமன்றக் கட்டண உயர்வுகளைக் கண்டித்து வழக்கறிஞர்கள் கடந்த வாரத்திலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் அதிமுகவைச் சேர்ந்த பல வழக்கறிஞர்கள் இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் தினமும்நீதிமன்றங்களுக்குச் சென்று வாதாடி வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த மற்ற வழக்கறிஞர்கள் அதிமுக வழக்கறிஞர்களை நீதிமன்ற வளாகத்திற்குள்ளாகவே ஓடஓட விரட்டியடித்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட அதிமுக வழக்கறிஞர்கள் நேராக சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டியிடம் புகார் செய்தனர். இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் தெற்கு கேட் தவிர அனைத்து கேட்டுகளையும்மூடுமாறு நீதிபதி சுபாஷன் ரெட்டி உத்தரவிட்டார்.
மேலும் அந்தத் தெற்கு வாசல் வழியாக வருபவர்களும் உரிய ஆவணங்களைக் காட்டி விட்டுத்தான் உள்ளே வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் தெற்கு கேட்டை முற்றுகையிட்டனர். அந்தகேட்டை இவர்களே வெளிப்புறமாக மூடி விட்டு தமிழக அரசையும் நீதிபதியையும் எதிர்த்து கோஷங்கள்எழுப்பினர். வெளியிலிருந்து செல்ல முயன்ற யாரையும் அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.
இதற்கிடையே பார் அசோஷியன் தலைவரான கருப்பன் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள்சென்னை-பாரிமுனை அருகே கண்டனப் பேரணி நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதி அளிக்கமறுத்தனர். அதையும் மீறி வழக்கறிஞர்கள் பேரணி நடத்த முயன்றதால் போலீசார் அவர்களைத் தடுத்து போலீஸ்வேனில் ஏற்ற முயற்சித்தனர்.
இதையடுத்து அங்கு கடும் "தள்ளு முள்ளு" ஏற்பட்டது. போலீசாரை எதிர்த்து வழக்கறிஞர்கள் பலத்த கோஷங்களைஎழுப்பினர். போலீசாரும் பதிலுக்கு உங்கள் மீது அவதூறு வழக்கு போடுவோம் என்று வழக்கறிஞர்களை நோக்கிஎச்சரித்தனர்.
இந்நிலையில் ஒரு போலீஸ் அதிகாரியை காமராஜ் என்ற வழக்கறிஞர் திடீரென்று தாக்கிவிட்டார். இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இத்தாக்குதலில் காமராஜின் காது கிழிந்து ரத்தம் கொட்டியது. அத்துடன் நிற்காமல் அவரை போலீசார் வேனில்ஏற்றி அழைத்துச் சென்றனர். ஆனால் பின்னர் அவரை மற்ற வழக்கறிஞர்கள் சென்று நிலைமையை எடுத்துச்சொல்லி மீட்டு வந்தனர்.
இதற்குள் பாரிமுனைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து அங்கு போக்குவரத்து முழுமையாகப்பாதிக்கப்பட்டது. சில மணி நேரம் கழித்தே போக்குவரத்து சீரடைந்தது.
இதற்கிடையே வழக்கறிஞர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளை வழக்கறிஞர்களின்பிரதிநிதிகளுடன் நீதிபதி சுபாஷன் ரெட்டி பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது.