நாகப்பா கடத்தலால் ஓசூர் பாதிப்பு
சென்னை:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தலையடுத்து கர்நாடக எல்லையில் உள்ள தமிழக தொழில் நகரான ஓசூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தின் கடைக் கோடியில் உள்ளது ஓசூர். கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருக்கு அருகே உள்ள முக்கிய தமிழக நகரம் இது.
கர்நாடகத்திலோ அல்லது பெங்களூரிலோ தமிழர்களுக்கு எதிராக வன்முறை நடந்தால் ஓசூர் தான் அதிகம் பாதிக்கப்படும். காரணம், ஓசூரைச் சேர்ந்த வர்த்தகர்கள், பெங்களூர் சென்று தான் தங்களுக்கு வேண்டிய பொருட்களை மொத்தமாக வாங்கி வருவார்கள்.
தற்போது நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்று விட்டதால் ஓசூர் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பேருந்துகள், கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளியுடன் நிறுத்தப்படுகின்றன. ஓசூரிலிருந்து அத்திப்பள்ளி வரை போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓட்டப்படுகின்றன.
மேலும், பெங்களூர் நகரில் 144 போலீஸ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கூட்டமாக சென்று பொருட்களை வாங்கவும் ஓசூர் வியாபாரிகள் பயப்படுகிறார்கள். இதனால் செவ்வாய்க்கிழமைதோறும் பெங்களூர் சந்தைக்கு செல்லும் வியாபாரிகள் இந்த செவ்வாய்க்கிழமையான நேற்று அங்கு செல்லவில்லை.
ஓசூரில் கன்னடர்கள் வசிக்கும் பகுதிகளான நேசியாபேட்டை, நகரத்துப் பேட்டை ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications