களை கட்டும் சத்தியமூர்த்தி பவன்
சென்னை:
சென்னை சத்தியமூர்த்தி பவன் மீண்டும் உற்சாகத்திற்கு மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் தொண்டர்கள்தலையையே காண முடிகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக இருந்து வந்தது சத்தியமூர்த்தி பவன். தமிழகத்தில் வேறுஎந்த அரசியல் கட்சிக்கும் பிரமாண்டமான சொந்த அலுலவகம் இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டுமேசத்தியமூர்த்தி பவன் என்ற மிகப் பெரிய கட்டடத்தின் கீழ் தனது கட்சியை நடத்தி வந்தது.
மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது, சத்தியமூர்த்தி பவனை அவர் கைப்பற்றிக்கொண்டார். இதையடுத்து வாடகைக் கட்டடத்திற்கு காங்கிரஸ் இடம் பெயர்ந்தது.
இந்த சூழ்நிலையில் இப்போது காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைந்து விட்டது. இதைத் தொடர்ந்து கட்சியின்தலைமை அலுவலகமும் சத்தியமூர்த்தி பவனுக்கு மாறுகிறது.
இரு கட்சிகளும் இணைந்த பிறகு முதல் முறையாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று(புதன்கிழமை) நடந்தது. அதில் அகில இந்திய செயலாளர் ரமேஷ் சென்னிதாலா, ஜி.கே. வாசன், இளங்கோவன்உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அத்தனைத் தலைவர்களையும் ஒரே அணியாகப் பார்த்து நாளாயிற்றே என்ற எண்ணத்திலோ என்னவோ, பவன்முழுவதும் தொண்டர்கள் தலை தான் காணப்பட்டது.
திருவிழாக் கூட்டம் போல காணப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களைப் பார்த்த பொதுமக்களுக்கு ஆச்சரியமோஆச்சரியம். காங்கிரஸுக்கு உண்மையிலேயே பலம் வந்து விட்டதோ என்ற எண்ணம் மக்களிடையே உருவானது.
இன்று மட்டுமல்ல, இரு கட்சிகளும் இணையப் போகின்றன என்ற பேச்சு எழுந்த நாள் முதலே சத்தியமூர்த்திபவனில் தொண்டர்கள் கூட்டம் களை கட்டத் தொடங்கி விட்டது.
இந்த ஒற்றுமையை, ஆர்வத்தை அத்தனை விஷயத்திலும் முனைப்புடன் காண்பித்தால் காமராஜர் ஆட்சி குறித்தகனவு நனவாவதற்கு வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் பேசிக் கொண்டனர்.