எதிரெதிர் திசையில் தமிழக- கர்நாடக அரசுகள்: நாகப்பா கதி என்ன?
சென்னை - பெங்களூர்:
வீரப்பன் விவகாரத்தில் தமிழக அரசும் கர்நாடக அரசும் ஒருவரை ஒருவரை முறைத்துக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாக செல்வதால்நாகப்பா மீட்கப்படுவது குறித்து பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
நாகப்பாவை வீரப்பன் கடத்திய உடன் இரு மாநில அரசுகளும் இணைந்து அவரை மீட்போம் என்று இரு மாநில முதல்வர்களும்அறிவித்தனர்.ஆனால், அவனுடன் பேச தூதரை அனுப்ப மாட்டேன் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பால் கர்நாடகம அதிர்ந்து போய் உள்ளது.
அதிரடிப் படையின் செயல்பாட்டை தமிழகம் தீவிரப்படுத்தியிருப்பதால் நாகப்பாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கர்நாடகம்கருதுகிறது. இதனால் தான் ஒரு பக்கம் அதிரடிப்படையின் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ள கர்நாடகம் மறுபக்கம் தூதுமுயற்சிகளையும் ஆரம்பித்துள்ளது.
ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல் தமிழகத்தில் இருந்து எந்தத் தூதரும் வர வாய்ப்பில்லை என்பதால் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஒருதூதரை காட்டுக்குள் அனுப்ப கர்நாடகம் முடிவு செய்துவிட்டது.
வீரப்பனிடம் இருந்து வந்துள்ள புதிய கேசட்டிலும் அதிரடிப்படையின் செய்ல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கைதான் உள்ளது. இதனை ஏற்காவிட்டால் நாகப்பாவை உயிருடன் பார்க்க முடியாது என்று எச்சரித்துள்ளான் வீரப்பன்.
ஆனால், வீரப்பனின் இந்தக் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு தயாராக இல்லை. இது குறித்து இன்று சத்தியமங்கலத்தில் தமிழகஅதிரடிப்படையின் தலைவர் வால்டர் தேவாரம் கூறுகையில், இது போன்ற தேடுதல் வேட்டை நடத்தும்போது கடத்திச் செல்லப்பட்டவரின்உயிருக்கு ஆபத்து இருக்கத் தான் செய்யும். அதில் சந்தேகமே இல்லை. அதற்காக கடத்தல்காரனைப் பிடிக்கும் பணியை நிறுத்திவிடமுடியாது என்றார்.
தமிழக உள்துறைச் செயலாளர் முனீர் ஹோதா நிருபர்களிடம் கூறுகையில், அதிரடிப் படையின் நடவடிகைகள் தொடரும். வீரப்பனைப்பிடிப்பது தான் ஒரே நோக்கம். அதே நேரம் நாகப்பாவையும் மீட்போம் என்றார்.
ஆனால், நாகப்பாவை உயிருடன் மீட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள கர்நாடக அரசு தமிழக அரசின் செயல்களால் கலக்கமடைந்துள்ளது.
இரு மாநில அரசுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால் நாகப்பாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கர்நாடககட்சிகள் கருதுகின்றன.
இது குறித்து நாகப்பாவின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்றத் தலைவர் பி.ஜி.ஆர். சிந்தியா கூறுகையில், நாகப்பாவை உயிருடன்மீட்க வேண்டும். அதற்கு இரு மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டாக வேண்டும். நாகப்பாவின் குடும்பத்தினர் இரு மாநிலஅரசுகளின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றார்போல இரு மாநில முதல்வர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.