இலங்கை: புலிகள் மீதான தடை நீங்கியது
கொழும்பு:
வரும் 16ம் தேதி தாய்லாந்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அரசுநேற்றிரவு நீக்கியது.
இதற்கான அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பாதுகாப்பு அமைச்சர் திலக் மரப்பனே கையெழுத்திட்டுள்ளார். முன்னதாக இலங்கைஅமைச்சரவை கூடி இந்த அறிவிப்புக்கு ஒப்புதல் தந்தது.
புதன்கிழமை நள்ளிரவு முதல் இந்த தடை நீக்கம் அமலுக்கு வந்தது. தீவிராதிகள் தடைச் சட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 4 ஆண்டு காலம்இலங்கையில் புலிகள் மீது தடை இருந்து வந்தது.
ஆனால், பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டுமானால் தங்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என புலிகள் நிபந்தனை விதித்திருந்தனர்.தடையை நீக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தயாராக இருந்தபோதும் கூட அதிபர் சந்திரிகா இதற்கு தடை விதித்து வந்தார்.
இதையடுத்து தடையை தாற்காலிகமாக நீக்குவது என்று இலங்கை அரசு முடிவெடுத்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும்தடை விதிப்பது என்ற திட்டமிட்டது.
ஆனால், தடையை முழுமையாக நீக்க வேண்டும், தாற்காலிகத் தடை நீக்கத்தை ஏற்க முடியாது என புலிகள் திட்டவட்டமாக அறிவித்ததால்நேற்று நள்ளிரவு தடை விலக்கப்பட்டது.
இதையடுத்து திட்டமிட்டபடி வரும் 16ம் தேதி தாய்லாந்து பேச்சுவார்த்தைகள் துவங்க உள்ளன.
பேச்சுவார்த்தை துவங்குவதற்கு இரு வாரங்களுக்கு முன் தடை நீக்கப்படும் என ரணில் ஏற்கனவே உறுதியளித்திருந்தார். இந் நிலையில் 12நாட்களுக்கு முன் தடை நீக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை மற்றும் நாட்டில் அமைதியைக் கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் புலிகள் இயக்கம் முழு ஒத்துழைப்புத் தரும்என புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியுள்ளார்.