9ம் தேதி தமிழக பந்த்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
சென்னை:
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிடத் தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசைக் கண்டித்து வரும் 9ம் தேதி பந்த் நடத்த தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் தலைமைச் செயலகத்தை விட்டு வெளியே வந்த ஜெயலலிதா நிருபர்களிடம் கூறுகையில்,
நாளை மறுநாள் (9ம் தேதி) கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் பந்த் நடத்த அனைத்துக் கட்சியினரும் ஒருமுகமாக முடிவு செய்துள்ளோம். இது முதற்கட்ட நடவடிக்கை தான்.
மேலும் நாளை கர்நாடக அரசுக்கு எதிராக இரண்டாவது அவமதிப்பு வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளோம் என்றார் ஜெயலலிதா.
முன்னதாக காவிரி பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று மாலை நடந்தது. வழக்கம்போல் இந்தக் கூட்டத்தையும் திமுக புறக்கணித்தது. ஆனால், பந்த் நடத்த முடிவு செய்தால் அதை ஆதரிப்போம் என கருணாநிதி காலையில் அறிவித்தார்.
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் கர்நாடக அரசு மீறியுள்ளதைத் தொடர்ந்து இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி தலைமைச் செயலகத்தில் நடந்த இக் கூட்டத்தில் காங்கிரஸ், பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், அனைத்துக் கட்சி தமிழக எம்.பிக்கள் மற்றும் காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தலைமையுரையாற்றிய ஜெயலலிதா, உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு தொடர்ந்து மீறி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
முன்னதாக பிரதமர் வாஜ்பாய் டெல்லி திரும்பிய பின்னர் 16ம் தேதி பந்த் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.ஆனால், பந்த்தை தள்ளிப் போட வேண்டாம் என்று எதிர்க் கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதால் 9ம் தேதியேநடத்த முடிவு செய்யப்பட்டது.
வழக்கம் போல் திமுக புறக்கணிப்பு:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாது என்று கருணாநிதி இன்று காலை கூறியிருந்தார்.
அதைப் போல மாலை இக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுவின் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) காலைநடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் கருணாநதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திமுக தலைமை குறித்து அதிமுக அரசு தரக்குறைவாக பேசியதையும், அறிக்கைகள் விட்டதையும் வாபஸ் பெறக் கோரினோம். ஆனால் இதுவரைவாபஸ் பெறவில்லை. இந் நிலையில் அதிமுக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக கலந்து கொள்வது சரியாக இருக்காது.
மேலும் விவசாயக் குடும்பத்தில் பிறக்காத எனக்கு காவிரிப் பிரச்சனை குறித்து ஒன்றும் தெரியாது என்றுஜெயலலிதா கூறி வருகிறார். அப்படிப்பட்ட நான் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் போய் என்ன செய்யப்போகிறேன் என்று வெறுப்புடன் கேட்டார் கருணாநிதி.
நாங்கள் இவ்வாறு புறக்கணிப்பதால் மற்ற எதிர்க் கட்சிகளுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என்று கருதத்தேவையில்லை. நாகரீகமான அரசியலைத் தான் எப்போதுமே திமுக நடத்தி வந்து கொண்டிருக்கிறது என்றும்கூறினார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications