பாகிஸ்தான் தேர்தல்: மத பழமைவாதிகள் கூட்டணி வெற்றி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நேற்று நடந்த தேர்தலில் நாடாளுமன்றத்திலும் மாநில சட்ட சபைகளிலும் மதத் தீவிரவாதிகள்- பழமைவாதிகள்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இக் கூட்டணி நாட்டின் 4 மாநிலங்ளில் 2ல் ஆட்சியைப் பிடிக்க உள்ளது. இன்னொன்றில் கூட்டணி அரசில் பங்கேற்க உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களைப் பிடித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவுடன் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் கூட்டணி சேர்ந்ததை எதிர்த்துஇந்த பழமைவாதக் கூட்டணி உருவானது.
மேலும் நாட்டில் பல தீவிரவாத அமைப்புகளை அமெரிக்க நெருக்குதலால் முஷாரப் ஒடுக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார்.
இதனால் முத்தாஹிதா மஜ்லீஸ்- ஏ- அமல் என்ற பெயரில் 6 பழமைவாதக் கட்சிகள் சேர்ந்து இந்தக் கூட்டணியை உருவாக்கின.தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தக் கூட்டணியின் தலைவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகவும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும்தான் பிரச்சாரம் செய்தனர்.
இவர்களுக்கு மதப் பள்ளிகளின் ஆதரவும் கிடைத்தது. இப்போது தேர்தல் முடிவுகளும் சாதகமாக வெளி வர ஆரம்பித்துள்ளன.இவர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி பாகிஸ்தான் மக்களிடையே அமெரிக்காவுக்கு நிலவி வரும் எதிர்ப்பு உணர்வைவெளிப்படுத்தியுள்ளது.
அடுத்து இந்தக் கூட்டணியே ஆட்சியமைக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு பெருகும்மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகள் தான் இவ்வாறு அமைந்துள்ளன. முழுமையான முடிவுகள் நாளை தான் தெரியவரும்.