தமிழர் நலன் காக்க உருவானது "தமிழர் அரசு"
மதுரை:
தமிழர்களை ஒற்றுமைப்படுத்தவும், ஜாதி மோதல்களைக் களையும் வகையிலும் தமிழர் அரசு என்ற புதிய அமைப்புமதுரையில் துவக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. முருகவேல்ராஜனும், தேவேந்திர குல இளைஞர் பேரவைத் தலைவர் பசுபதிபாண்டியன் ஆகியோர் இணைந்து இந்த அமைப்பைத் துவக்கியுள்ளனர்.
பசுபதி பாண்டியன் இந்த அமைப்பின் தலைவராகவும், முருகவேல்ராஜன் பொதுச் செயலாளராகவும் செயல்படுவர்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து முருகவேல்ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக வரலாற்றில் காமராஜர், அண்ணாதுரை, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய முதல்வர்களைத் தவிர்த்து தவிர வேறுயாரும் தமிழர்கள் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆள வேண்டும். தமிழர்களுக்காகப் பாடுபடும் அமைப்புகள், கட்சிகள், நபர்களுக்குஎங்களது அமைப்பு ஆதரவு தரும்.
ஜாதிகளை வைத்து தமிழகத்தைத் துண்டாட அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். அதற்கு தமிழர்கள் ஏமாந்து இடம்கொடுத்துவிடக் கூடாது.
எங்களது அமைப்பிற்கு தனிக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. மேலே சிவப்பும், நடுவில் பச்சையும் கீழேமஞ்சளும் கொண்டதாக கொடி இருக்கும். இது அரசியல் அமைப்பு அல்ல. தேர்தலிலும் போட்டியிட மாட்டோம்.
ஆனால் தமிழர் நலனுக்காக பாடுபடும் கட்சிகளுக்கு ஆதரவு தருவோம் என்றார் முருகவேல்ராஜன்.