திருமண முயற்சி: மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் 13 வயது சிறுமி தஞ்சம்
சேலம்:
தனது விருப்பத்தையும் மீறி 32 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற தாயிடமிருந்து தப்பி அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தாள் 13 வயது மேட்டூர் சிறுமி.
மேட்டூரைச் சேர்ந்தவள் தமிழரசி. 13 வயதாகும் இவருக்குத் தந்தை இல்லை. தாய் மட்டுமே உள்ளார்.
வறுமையில் குடும்பம் வாடியதால், தமிழரசியை யாருக்காவது திருமணம் செய்து வைத்து விட தாயார் முடிவுசெய்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த மாதையன் என்ற 32 வயது நபருக்கு தமிழரசியை திருமணம் செய்து வைக்க அவருடையதாய் முடிவு செய்தார். இதற்காக மாதையனிடமிருந்து ரூ.5,000 பணத்தையும் பெற்றுக் கொண்டார்.
இதையறிந்த தமிழரசி, தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் தாயார் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து என்ன செய்வதென்று புரியாத தமிழரசி, மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம்புகுந்தார். காவலர்களிடம் அழுதவாறே தனது நிலையைக் கூறினார்.
இதையடுத்து மாதையன் மற்றும் தமிழரசியின் தாயாரை வரவழைத்த போலீஸார் அவர்களை எச்சரித்துஅனுப்பினர்.
பின்னர் தமிழரசி தொடர்ந்து படிக்க விரும்புவதாக தெரிவிக்கவே அவருக்கு பலரும் நிதியுதவி செய்து நன்றாகபடிக்குமாறு கூறினர். அதன் பிறகு தமிழரசியைப் போலீசார் அவருடைய வீட்டுக்கே அனுப்பி வைத்தனர்.