ஜெயலலிதாவுடன் கிருஸ்து, முஸ்லீம் தலைவர்கள் சந்திப்பு
சென்னை:
எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் மனத்தில் நினைத்துக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக்கொண்டுவரவில்லை என்று சிறுபான்மை மதத் தலைவர்களிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கினார்.
தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள மதமாற்றத் தடைச் சட்டத்தை கிருஸ்தவர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்டசிறுபான்மையினர் மிகவும் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து வரும் 24ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவை சிறுபான்மை மதத் தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர்.
கிருஸ்தவ மற்றும் முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த 16 தலைவர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகம் சென்றுஜெயலலிதாவைச் சந்தித்தனர். அவர்களிடம் பேசிய ஜெயலலிதா,
எந்த ஒரு மதத்தினரையும் மனதில் கொண்டு இந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவரவில்லை.
கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகஇந்தச் சட்டம் பாயும்.
சிறுபான்மையினரின் நலனில் தமிழக அரசு எப்போதுமே அக்கறை கொண்டுள்ளது. இனியும் அவ்வாறேசெயல்படும் என்று அவர்களிடம் ஜெயலலிதா கூறினார்.
ஆனால் ஜெயலலிதாவின் பேச்சில் சிறுபான்மை தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.இதையடுத்து வரும் 24ம் தேதி அவர்கள் மேற்கொள்ளவுள்ள போராட்டம் கட்டாயம் நடந்தே தீரும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
அன்று தான் தமிழக சட்டசபையின் குளிர் காலக் கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது என்பதும் இந்தக் கூட்டத்தொடரில் தான் மதமாற்றத் தடைச் சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.