மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
தமிழக அரசு கொண்டு வந்துள்ள மதமாற்றத் தடைச் சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தமிழக அரசு சமீபத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக்கொண்டு வந்தது.
கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கவும், ரூ.50,000வரை அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
வரும் 24ம் தேதி தொடங்கும் தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடரில் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
ஆளும் அதிமுக மற்றும் பா.ஜ.கவைத் தவிர பெரும்பாலான கட்சிகளும், சிறுபான்மை மத அமைப்புகளும் இந்தச்சட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பதால் இந்தக் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை மதத்தினர் 24ம் தேதி பல்வேறு போராட்டங்களை நடத்தவுள்ளனர்.சிறுபான்மையினர் தாங்கள் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களையும் அன்றைய தினம் மூடவுள்ளனர்.
இந்நிலையில் மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்குதொடரப்பட்டுள்ளது.
திருத்தணியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். இந்த மதமாற்றத் தடைச் சட்டத்தைசெல்லாது என்று அறிவிக்கக் கோரி அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கராஜின் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிகிறது.