ரணிலுடன் இணைந்து செயல்பட சந்திரிகா விருப்பம்
கொழும்பு:
அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு இனப் பிரச்சனைக்கு முழுத் தீர்வு காண தன்னுடன் இணைந்து செயல்பட பிரதமர் ரணில்விக்கிரமசிங்கே முன் வர வேண்டும் என இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று ரூபவாகினி தொலைக் காட்சியில் பேசிய சந்திரிகா இந்தக் கோரிக்கையை முன் வைத்தார்.
அவர் பேசுகையில், அரசியல் வேறுபாடுகளை களைந்துவிட்டு நீங்கள் என்னுடன் கைகோர்க்க வேண்டும்.
இனப் பிரச்சனைக்கு நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்கும் வகையில் தீர்வு காண இருவரும் இணைந்து செயல்படலாம்.இப்போது ஏற்பட்டிருக்கும் போர் நிறுத்தத்தால் மட்டும் அமைதி திரும்பிவிடாது என்றார்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது சுற்று வரும் 31ம் தேதிதாய்லாந்தில் நடக்க உள்ள நிலையில் சந்திரிகா இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.
அவரை ஒதுக்கிவிட்டுத் தான் இந்தப் பேச்சுவார்த்தைகளை ரணில் துவக்கினார். பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்துவருவதால் இனியும் தான் விலகி இருப்பது நல்லதல்ல என்பதை சந்திரிகா உணரத் தொடங்கியுள்ளார்.
இதனால் பேச்சுவார்த்தைகளில் தன்னையும் ஒரு பகுதியாக்கிக் கொள்ளும் முயற்சியாகவே ரணிலுக்கு சந்திரிகா இந்தககோரிக்கையை விடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், ரணில் தரப்பில் இருந்து சந்திரிகாவின் இந்த கோரிக்கைக்கு எச்சரிக்கை கலந்த வரவேற்பு தான்தெரிவிக்கப்பட்டுள்ளது.