உ.பியில் கவிழும் நிலையில் மாயாவதி- பா.ஜ.க. அரசு
லக்னெள:
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்- பா.ஜ.க. அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. எம்எல்ஏக்கள் 12 பேர் மாயாவதி அரசுக்கு தந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். மேலும் 6 சுயேச்சைகளும் ஆதரவைத்திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் மாயாவதி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
மொத்தம் 404 பேர் கொண்ட சட்டசபையில் மாயாவதி அரசுக்கு மொத்தம் 217 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தது.
இப்போது பா.ஜ.கவைச் சேர்ந்த இந்த 12 அதிருப்தி எம்.எல்.ஏக்களும் 6 சுயேச்சைகளும் சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங்யாதவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தந்துள்ளனர். இதனால் மாயாவதி- பா.ஜ.க. அரசுக்கு 199 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தான் உள்ளது.ஆட்சியில் நீடிக்க மொத்தம் 202 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.
இந் நிலையில் முலாயம் சிங் தனக்கு 204 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி எம்.எல்.ஏக்களின் பட்டியலையும் ஆளுநர்விஷ்ணுகாந்த் சாஸ்திரியிடம் ஒப்படைத்துள்ளார்.
சட்டசபையைக் கூட்டி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முலாயம் சிங் கோரியிருந்தார். ஆனால், இதை மத்தியஅரசும், மயாவதியும் விரும்பவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி கிடைப்பது நிச்சயம் என்பதால் சட்டசபையை கூட்டவேண்டாம் என ஆளுநரை மத்திய அரசு நிர்பந்தித்து வருகிறது. அவரும் மத்திய அரசு சொல்படி செயல்பட்டு வருகிறார்.
இந் நிலையில் தனக்கு ஆதரவு தரும் 204 எம்.எல்.ஏக்களின் பட்டியலுடன் போய் அவரைச் சந்தித்து தன்னை ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் என முலாயம் சிங் தரப்பு கோரியுள்ளது. முலாயமின் வலது கரமான அமர்சிங் இன்று இந்த் பட்டியலுடன் சென்று ஆளுநரைச்சந்தித்தார்.
மத்திய அரசுக்கு ஆதரவாக ஜால்ரா அடித்து வரும் ஆளுநரிடம் 204 எம்.எல்.ஏக்கள் பட்டியலை தந்துள்ளதன் முலம் ஆளுநருக்கும் ஆப்புஅடித்துள்ளார் முலாயம் சிங். இதன்மூலம் மாயாவதி- பா.ஜ.க. கூட்டணி அரசு மெஜாரிட்டி இழந்துள்ளதாகவும் அதனால் அந்த அரசைகலைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
முலாயம் சிங்குக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் கட்சியும் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், அதிருப்தி பா.ஜ.க. எம்எல்ஏக்களை எப்படியாவது மீண்டும் வசப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதுநடக்காத பட்சத்தில் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைக் கலைத்துவிட்டு இடைத் தேர்தல் நடத்தக் கூட மத்திய அரசு முயலலாம்.
எக்காரணம் கொண்டும் முலாயம் சிங் ஆட்சிக்கு வருவதை பா.ஜ.க. தடுக்க முயலும்.