கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் கவர்களுக்குத் தடை
நாகர்கோவில்:
சுற்றுலாத் தளமான கன்னியாகுமரியில் நேற்று சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
காகிதம் மற்றும் அட்டையினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாவட்டஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் இங்கு அளவுக்கு அதிகமாககுப்பை சேர்ந்து குமரியின் அழகும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக கடற்கரையில் பயணிகளால் வீசப்படும் பிளாஸ்டிக் கவர்களால் அதன் இயற்கைச் சூழல் மிகவும்பாதிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இங்கு பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்கவும், பயன்படுத்தவும் தடைவிதிக்கப்படுகிறது.
நகருக்குள் பிளாஸ்டிக் கவர் தயாரித்தால் ரூ. 5,000 அபராதமும், விற்றால் ரூ. 2,500 அபராதமும்,பயன்படுத்தினால் ரூ. 100 ம் அபராதமாக விதிக்கப்படும்.
பிளாஸ்டிக்கிற்குப் பதில் காகிதம் மற்றும் அட்டையினால் தயாரிக்கப்பட்ட பைகளையே பயன்படுத்த வேண்டும்என்று ஆட்சித் தலைவர் பேடி அறிவித்துள்ளார்.
காகிதப் பைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள்களின் விற்பனையையும் அவர் கன்னியாகுமரியில் நேற்றுதொடங்கி வைத்தார்.