திருடன் என்று நினைத்து வாலிபரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்
சேலம்:
சகோதரி வீடு தெரியாமல் அலைந்து கொண்டிருந்த வாலிபரை திருடன் என்று நினைத்து பொதுமக்கள் அடித்துக்கொன்றனர். சேலம் அருகே நடந்த இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் அருகே உள்ள இளம்பிள்ளை பகுதியில் ஒரு வாலிபர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். இதையடுத்துஅப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த வாலிபரை அழைத்து விசாரித்தனர். அதற்கு அவர் சரியாகப் பதில்சொல்லவில்லை என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அவரை திருடன் என்று நினைத்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை சரமாரியாக அடித்தனர்.இதில் அந்த வாலிபர் சுருண்டு விழுந்து இறந்தார்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போகவே அவர்கள் விரைந்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் முருகன் என்றும், இளம்பிள்ளையில் உள்ள தன் சகோதரியைப் பார்க்கவந்தவர் என்றும், முகவரி தெரியாமல் தான் அலைந்து கொண்டிருந்தார் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து வாலிபரை அடித்துக் கொன்றதாக அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பேரைப் போலீஸார் கைதுசெய்தனர்.
-->