நிதி திரட்டும் மாநாடு: இந்தியாவுக்கு இலங்கை அழைப்பு
கொழும்பு:
இலங்கை சீரமைப்புப் பணிகளுக்காக நிதி திரட்டுவதற்காக நார்வேயில் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளபிரம்மாண்டமான மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு விரும்புகிறது.
இதற்கான அழைப்பை விடுப்பதற்காக இலங்கை பொருளாதார சீரமைப்புத் துறை அமைச்சரான மிலின்டாமோரகோடா அடுத்த ஓரிரு நாட்களில் டெல்லி விரைகிறார்.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைவரவேற்றுள்ள இந்திய அரசு அண்டை நாடாக இருந்தும் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தில் அக்கறைகொள்ளாமலிருக்கிறதே என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
முக்கியமாக இலங்கையில் வாழும் தமிழர்கள் கூட இவ்விஷயத்தில் இந்தியாவின் மீது அதிருப்தி கொண்டுள்ளனர்.
ஆனால் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையின் முக்கியக் குற்றவாளியான புலிகளின்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பிடித்துக் கொண்டு வருவதற்கு இந்திய ராணுவம் அனுப்பப்படவேண்டும் என்கிற அளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறி வருகிறார்.
முன்னாள் பிரதமர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதால் இந்திய அரசும் இலங்கை விவகாரத்தில் அவ்வளவாகத்தலையிடுவதில்லை. புலிகளுக்கு எதிரான தடையையும் சில மாதங்களுக்கு முன்னர் அது நீட்டித்தது.
இந்நிலையில் நார்வே தலைநகரான ஓஸ்லோவில் புலிகளும் கலந்து கொள்ளும் நிதி திரட்டும் மாநாட்டில் இந்தியாகலந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை விரும்புகிறது.
ஆனால் இம்மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து இதுவரை இந்தியா எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை.இருந்தாலும் புலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாதுஎன்றே கூறப்படுகிறது.
இந்தியா இதில் கலந்து கொள்ளக் கூடாது என்றே தாங்களும் விரும்புவதாக இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவின் மக்கள் கூட்டணிக் கட்சி சமீபத்தில் கூறியது.
தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளால் புலிகளுக்குத் தான் நன்மை கிடைக்கும் என்றுகுற்றம் சாட்டியுள்ள மக்கள் கூட்டணிக் கட்சி, இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதி தனி நாடாக சிதறுண்டுபோகும் வாய்ப்பு இருப்பதாகவும் இலங்கை அரசைக் குறை கூறியுள்ளது.
இந்நிலையில் நிதி திரட்டும் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்காகமோரகோடா அடுத்த ஓரிரு நாட்களில் டெல்லி சென்று தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
இந்தச் சந்திப்பிற்குப் பின்னரே இம்மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளுமா, இல்லையா என்பது குறித்து தெரியவரும்.
புலிகள் மீது தடை விதித்துள்ள அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்த நிதி திரட்டும் மாநாட்டில்கலந்து கொள்ள முடிவு செய்துள்ளன என்பதும் அவை வடக்கு-கிழக்கு இலங்கைக்கான பல்வேறு நிதித்திட்டங்களை அறிவிக்கவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டின் போது, புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கமும், இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேவும் சந்தித்துப் பேசவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓஸ்லோவிலிருந்த திரும்பிய பின்னர் சந்திரிகாவை சந்திக்க ரணில் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.