சென்னையில் மீண்டும் கொள்ளையர்கள் கைவரிசை: ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை
சென்னை:
சென்னையில் ஒரு ஏற்றுமதி நிறுவன அதிபரின் வீட்டு ஜன்னல் கம்பிகளை அறுத்து, உள்ளே புகுந்து ரூ.8 லட்சம்மதிப்புள்ள நகைகள், பணம் மற்றும் அமெரிக்க டாலர்களைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர் கொள்ளைகளால் சென்னை மாநகரமே பெரும் பீதியில் உறைந்து கிடந்தது.இவை தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்ட பின்னர் கொள்ளைச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்தன.
இந்நிலையில் தற்போது மீண்டும் கொள்ளைச் சம்பவங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சத்தியம். இவர் ஒரு ஏற்றுமதி நிறுவன அதிபர். தொழில் விஷயமாக குடும்பத்துடன்வெளிநாடு சென்றிருந்த சத்தியம் ஒரு சில நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பியிருந்தார்.
சத்தியமும் அவருடைய குடும்பத்தினரும் வீட்டின் அருகே உள்ள வேறொரு இடத்தில்தான் தூங்குவது வழக்கம்.அதுபோலவே நேற்றிரவும் தூங்கச் சென்ற அவர்கள், இன்று காலை தூங்கி எழுந்து வந்து வீட்டின் கதவைத்திறந்தனர்.
அப்போதுதான் வீட்டின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. பதறிப் போன அவர்கள் உடனேவீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவிலிருந்து 900 அமெரிக்க டாலர்கள், ரூ.1 லட்சம்மதிப்புள்ள நகைகள், பாத்திரங்கள் மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதும் தெரிய வந்தது.இவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.
இதுகுறித்து போலீசாரிடம் சத்தியம் புகார் கொடுத்தார். போலீசாரும் விரைந்து வந்து கைரேகைகளைச் சேகரித்து,தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications