டெல்லியில் அதிகாலை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
டெல்லி:
டெல்லியில் இன்று அதிகாலை இரு பாகிஸ்தான் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
டெல்லியில் இரு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுப் பிரிவினர் கண்டறிந்தனர். இதையடுத்து நேற்று இரவில்இருந்து ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
தீவிரவாதிகள் ஊடுருவலை அடுத்து தெற்கு டெல்லியில் உள்ள இந்திய விமானப் படைத் தளம், எல்லைப் பாதுகாப்புப் படைமுகாம் அமைந்துள்ள கோட்டை பகுதியில் ரோந்தும் அதிகரிக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று அதிகாலை துக்ளகாபாத் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற ஒரு வெள்ளை நிற மாருதி ஜென்காரை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் ஜீப்களில் அந்த காரை விரட்டிச் சென்றனர். நீண்ட தூரம் விரட்டியபிறகு அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அதில் இருந்து இறங்கிய 3 பேர் இருட்டில் ஓட ஆரம்பித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை நோக்கிச் சுட்டனர்.இதில் 2 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். ஒருவன் தப்பியோடிவிட்டான்.
காரில் இருந்த இவர்களது உடமைகளை சோதனையிட்டபோது இவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று தெரியவந்தது.
காரில் இருந்த இருந்து 2 ஏ.கே.-47 துப்பாக்கிகள், கிரனைட்கள், தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி நேற்று தான் ஓராண்டு முடிவடைந்தது. கடந்த 2001 டிசம்பர்13ம் தேதி 4 தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர். அந்தத் தாக்குதலில் 9 போலீசாரும் உயிரிழந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.
தங்களது கூட்டாளிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க அதே தேதியில் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்றுஉளவுப் பிரிவினர் ஏற்கனவே மத்திய அரசை எச்சரித்திருந்தனர்.
இந் நிலையில் இந்த இரு தீவிரவாதிகளும் டெல்லியில் ஊடுருவி உள்ளனர். விமானப் படைத் தளம் அல்லது எல்லைப்பாதுகாப்புப் படையின் முகாமை இவர்கள் தாக்கச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தப்பிச் சென்ற 3வது தீவிரவாதியைப் பிடிக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
-->