அன்பழகனுக்கு 81 வயது: கருணாநிதி, இளங்கோவன் நேரில் வாழ்த்து
சென்னை:
திமுக பொதுச் செயலாளரான அன்பழகன் இன்று தன்னுடைய 81வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாளையொட்டி இன்று காலை சென்னை-மெரீனாவில் உள்ள அண்ணா சமாதிக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் அன்பழகன். தொடர்ந்து அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கும் அவர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின் வீடு திரும்பினார்.
அன்பழகன் வீட்டுக்குத் தன் மனைவி தயாளு அம்மாளுடன் வந்த கருணாநிதி அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அன்பழகனுக்குப் பொன்னாடையும், மாலையும் அணிவித்தார் கருணாநிதி.
கருணாநிதியைத் தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் திமுக அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், ரகுமான்கான், கோ.சி. மணி மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோரும் அன்பழகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர்.
பின்னர் கவிஞர் வைரமுத்து, இளங்கோவன், காங்கிரஸ் பேரவை எம்.எல்.ஏவான ரங்கநாதன் உள்ளிட்ட தலைவர்களும் நேரில் வந்து அன்பழகனை வாழ்த்தினர். அனைவருக்கும் அன்பழகன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அன்பழகன் பிறந்தநாளை முத்து விழாவாகக் கொண்டாடுகிறது திமுக. இதையொட்டி இன்று மாலை தங்கசாலை பகுதியில் ஒரு பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.
முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சைதை கிட்டு, முன்னாள் துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
-->