சென்னை மேயர் தேர்தலை நடத்த நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஒருவருக்கு ஒரு பதவி சட்டத்தின் கீழ் மு.க. ஸ்டாலினிடம் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மேயர் பதவி பறிக்கப்பட்டது. அதன் பின்னர் இன்னும் அந்தப் பதவிக்கு தேர்தல் நடக்கவில்லை. தேர்தலையே சந்திக்காமல் தனது கட்சியைச் சேர்ந்த துணை மேயர் கராத்தே தியாகராஜனை மேயர் பொறுப்பில் அமர்த்தியது அரசு. ஆனால், இதற்கு நீதிமன்றத்தில் இருந்து எதிர்ப்பு வந்தது.
இதையடுத்து கடந்த மேயர் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற தனது கட்சியைச் சேர்ந்த பாலகங்காவை எப்படியாவது மேயராக்கிவிடும் முயற்சிகளில் அதிமுக ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த எம்.பி. மைத்ரேயன், சென்னை மேயர் தேர்தலை நடத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், மாநகராட்சி விதிகளை மீறி ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட்டதால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பெற்ற அதிமுகவைச் சேர்ந்த பாலகங்காவையே மேயராக அறிவிக்கும்படியும் அவர் கோரியுள்ளார்.
இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையமும் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் வரும் பிப்ரவரியில் தேர்தலை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடந்து வருவதாகவும் கூறியிருந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கிய முதலாவது டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநகராட்சி சார்பில் (அதிமுக அரசுக்கு ஆதரவாக) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த மாதம் மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.
அதில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடிவடையாத நிலையில் மேயர் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அந்தப் பணி முடிவடையும் வரை மேயர் தேர்தலை 2 மாதங்களுக்கு தள்ளி வைக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் பிப்ரவரியில் தேர்தலை நடத்தும் தேர்தல் கமிஷனின் திட்டத்துக்குக் தடை விதித்தனர்.
வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணி முடியும் வரை தேர்தலை நடத்தக் கூடாது என்று அறிவித்தனர். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-->