"வேத ஆகம பள்ளிகள் மீது குண்டு வீசுவேன்": ராமதாசுக்கு கோர்ட் நோட்டீஸ்
மயிலாடுதுறை:
வேத ஆகம பள்ளிகளைத் திறந்தால் அவற்றின் மீது குண்டு வீசுவேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசிய வழக்கில் அவர் வரும் ஜனவரி 8ம் தேதி ஆஜராக வேண்டும் என்று மயிலாடுதுறை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மயிலாடுதுறையில் கடந்த 1993ம் ஆண்டு நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில், பிராமணர்களை மிகவும் இழிவாகப் பேசியதோடு, வேத ஆகம பள்ளிகளைத் திறந்தால் அவற்றின் மீது குண்டு வீசுவோம் என்றும் மிரட்டல் தொணியில் பேசினார்.
இது தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் ராமதாஸ் மீது வழக்கு ஒன்றைப் பதிவு செய்தனர். மயிலாடுதுறை நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடந்து வந்தது.
இவ்வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திற்கு வராமல் இருந்த ராமதாஸுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.
இதற்கிடையே ராமதாஸ் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவைப் பரிசீலித்த மயிலாடுதுறை நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார், போலீசார் பதிவு செய்த வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றும், இவ்வழக்கு தொடர்பாக வரும் ஜனவரி 8ம் தேதி ராமதாஸ் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications