சென்னையில் கழுத்தை அறுத்து பெண் கொலை
சென்னை:
சென்னை மயிலாப்பூர் பகுதியில் 39 வயதுப் பெண் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மயிலாப்பூர் புதுத் தெருவில் வசித்து வந்தவர் வித்யா. இவருக்கு வயது 39 ஆகிறது. கடந்த 1984ம் ஆண்டு இவருக்கு கல்யாணம் நடந்தது.
மகன் பிறந்த பிறகு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவரை விட்டுப் பிரிந்து பத்மநாபன் என்பவருடன் மயிலாப்பூரில் வசித்து வந்தார் வித்யா.
கடந்த ஏழு ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்த வித்யாவுக்கும், வீட்டு உரிமையாளர் அன்பழகனுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. வாடகை தொடர்பான இந்தப் பிரச்சினை குறித்து கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படுவதாக இருந்தது.
இந்தச் சூழ்நிலையில், வித்யாவின் மகன் பிரதீப் இன்று காலை தன் தாய்க்குப் போன் செய்தார். ஆனால் வித்யா போனை எடுக்கவில்லை.
இதனால் குழப்பமடைந்த பிரதீப் வீட்டுக்கு விரைந்தார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த அவர் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்தார்.
அங்கு ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் வித்யா பிணமாகக் கிடந்ததைக் கண்டு பிரதீப் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.
காவல்துறை துணை ஆணையாளர் திரிபாதி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். குற்றம் நடந்த இடத்தில் மோப்ப நாய் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. அது அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் வரை சென்று திரும்பி விட்டது.
இதையடுத்து கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வித்யாவுடன் வசித்து வந்த பத்மநாபன், வீட்டு உரிமையாளர் அன்பழகன் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வித்யாவுக்கு மேலும் சிலருடன் தொடர்பு இருந்ததாகவும் அதுகுறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது நகை, பணத்திற்காக நடந்த கொலை அல்ல என்றும் போலீசார் கூறினர்.
-->












Click it and Unblock the Notifications