காவிரி ஆணைய கூட்டம் எப்போது?: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி:
காவிரி ஆணையக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் எப்போது நடத்தப் போகிறார் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்விஎழுப்பியுள்ளது.
கடந்த நவம்பர் 29, ஜனவரி 13ம் தேதிகளில் நடக்க இருந்த காவிரி ஆணையக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா மற்றும்பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் புறக்கணிப்பால் நடக்காமல் போய்விட்டது.
இந் நிலையில் காவிரியில் நீர் விட மறுத்த கர்நாடகத்துக்கு எதிராக தமிழகம் தாக்கல் செய்த வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில்மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக, கர்நாடக வழக்கறிஞர்கள் கடுமையாக மோதினர். கர்நாடகம் நீரை விடாமல் தமிழகத்தின் பயிர்களைஅழித்துவிட்டதாக தமிழக வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறியதாவது:
தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் விட மறுத்ததால் 11 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிரைக் காப்பாற்ற முடியாமல்போய்விட்டது.
இப்போது 5 லட்சம் ஏக்கர் பயிரையாவது காப்பாற்ற முடியுமோ இல்லையோ என தமிழகம் கலங்கிக் கிடக்கிறது. கர்நாடகம் 13டி.எம்.சி. நீரை உடனே விட்டால் தான் இந்தப் பயிர்கள் தப்பும். இல்லாவிட்டால் அதுவும் கருகிவிடும் என்றார்.
ஆனால், கர்நாடகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நாரிமன் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படிநவம்பர், டிசம்பரில் போதிய நீரை விட்டுள்ளது என்றார்.
இதையடுத்துப் பேசிய வேணுகோபால், காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை கர்நாடகம் மதிப்பதே இல்லை. நீர் விடச் சொல்லிபிரதமர் ஆணையிட்டும் கூட விடவில்லை. நீதிமன்றம் தலையிட்ட பின்னர் தான் காலதாமதாக நீரைத் தந்தார். பல நேரங்களில்உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கூட கர்நாடகம் மதிப்பதில்லை.
இதனால் தான் கர்நாடகத்துக்கு எதிராக தமிழகம் இரு அவமதிப்பு வழக்குகளைப் போட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இருவழக்குகள் போட்ட பின்னர் தான் ஏதோ கொஞ்சம் நீரை கர்நாடகம் தந்தது.
காவிரி ஆணையக் கூட்டத்தை நடத்த பிரதமர் வாஜ்பாய் எவ்வளவோ முயன்றார். ஆனால், பிற முதல்வர்கள் கலந்து கொள்ளாமல்போனதால் தான் கூட்டம் நடக்கவில்லை என்றார் வேணுகோபால்.
இந்த வாதங்களை தலைமை நீதிபதி காரே, நீதிபதி சபர்வால், நீதிபதி அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்கேட்டறிந்தது.
பின்னர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் சோலி சோராப்ஜியை அழைத்த நீதிபதிகள், அடுத்த காவிரிஆணையக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் எப்போது நடத்தப் போகிறார் என்று கேட்டு நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும் எனஉத்தரவிட்டனர்.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், விரைவில் காவிரி ஆணையக் கூட்டம் நடந்து பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டால் நல்லது,இல்லாவிட்டால் எங்களிடம் உள்ள இந்த வழக்கில் நாங்கள் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டியிருக்கும்.
இதனால் வரும் செவ்வாய்க்கிழமைக்குள் அடுத்த காவிரி ஆணையக் கூட்டத்தின் தேதி குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும். இந்த வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
தமிழகத்துக்கு உதவும் கேரளம்:
இந் நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்ட பாசனத்துக்காக நெய்யாறு அணையில் இருந்து கேரளம் நீரை விடுவித்தது.
வளவன்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரைப் பாதுகாக்க இந்த நீர் உதவும். வினாடிக்கு 150 கன அடிவீதம் கேரளத்தில் இருந்து இன்று நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் 5,000 ஏக்கர் பயிர்கள் பலனடையும். மேலும் 20 நாட்களுக்குநீரை விடுமாறு கேரளத்திடம் தமிழகம் கோரியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, சித்தாறு 1, சித்தாறு 2, பெரிஞ்சணை ஆகிய அணைகளில் நீர் மட்டம் மிகக்குறைவாக 14,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல்லைப் பாதுகாக்க இந்த நீரை ரேளத்திடம் தமிழகம் கோரியது.
கேரளமும் நீரைத் தந்து உதவியுள்ளது. கேரளத்துக்கு உணவு தானியங்கள், காய்கறிகள் முழுவதுமே தமிழகத்தில் இருந்து தான்செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கேரளத்தில் ஏலக்காய், ரப்பர் போன்ற பணப் பயிர்களில் விவசாயிகள் ஆர்வம்காட்டுவதால் உணவு தானிய விளைச்சலே இல்லை.
-->