மதுரை உயர் நீதிமன்ற ஊழல்: சதி நடப்பதாக பொதுப்பணித் துறை புகார்
மதுரை:
மதுரை உயர் நீதிமன்றக் கிளையை இயங்க விடாமல் தடுப்பதற்காகவே, அங்கு கட்டுமானப் பணியில் ஊழல்நடந்துள்ளதாகப் புகார் எழுப்பப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மதுரை உலகனேரி பகுதியில் ரூ.44 கோடி செலவில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டுள்ளது.தென் மாவட்ட மக்களின் பல ஆண்டு கால கனவு நனவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 14ம் தேதி உயர் நீதிமன்றக் கிளை செயல்படத் தொடங்கும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தலைமை நீதிபதியும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கட்டுமானப் பணியில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் உயர்நீதிமன்றக் கிளைக் கட்டடத்தை ஆராய்ந்து வருகிறார்கள். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த இந்த ஊழல்தொடர்பாக பொதுப்பணித் துறை பொறியாளர்கள், ஒப்பந்தகாரர்கள் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
திமுக ஆட்சிக் காலத்தில் இந்த ஊழல்கள் நடந்துள்ளதால் அரசு இதில் தீவிர அக்கறை காட்டி வருகிறது. மதுரைஉயர் நீதிமன்றக் கிளையின் பல இடங்களில் செங்கற்களை இடித்தும், துளை போட்டும் ஆய்வுக்கு சாம்பிள்களைஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்றக் கிளை கட்டுமானப் பணிகளில் ஊழல் நடக்கவில்லை என்று பொதுப்பணித்துறையினர் வாதாடுகிறார்கள்.
உயர் நீதிமன்றக் கிளையை இயங்க விடாமல் தடுக்கும் முயற்சியாகவே இந்த பொய்யான புகார் எழுந்துள்ளதாகஅவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர்கள்கூறுகின்றனர்.
இது தொடர்பாக மதுரை மாவட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த 1996ம் ஆண்டுமுதல் 2001ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மதுரை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ரூ.300 கோடிஅளவுக்குப் பணிகளை பொதுப்பணித் துறை மேற்கொண்டுள்ளது.
அத்தனை பணிகளும் தெளிவாகவும், ஒளிவு மறைவு இல்லாமலும் நடந்துள்ளன. இந்நிலையில் உயர் நீதிமன்றக்கிளை கட்டுமானப் பணிகளில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறுவதை ஏற்கவே முடியாது.
ஊழலை நாங்களும் ஆதரிக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில், ஊழல் நடந்திருப்பதாக ஆதாரத்தைக் காட்டிவிட்டு சோதனை நடத்தட்டும். வெறுமனே பொதுப்பணித் துறையினர் மீது பழி போடுவதை எப்படி நாங்கள் ஏற்கமுடியும் என்கிறார்கள் இவர்கள்.
இந்நிலையில் மதுரை வக்கீல்கள் சங்கம் இந்தத் திடீர்ப் பிரச்சனையால் குழம்பிப் போயுள்ளது. உயர் நீதிமன்றக்கிளை கட்டுமானப் பணி ஊழல் புகார்கள் உண்மைதானா, அல்லது அரசியல் பின்னணி உள்ளதா என்பது குறித்துஅவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
வக்கீல்கள் சங்கத்தின் செயலாளர் சுல்தான் அலாவுதீன் கூறுகையில்,
உயர் நீதிமன்றக் கிளை வரப் போவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு செய்திவந்திருப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
உண்மையிலேயே ஊழல் நடந்திருந்தால் தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றார்அலாவுதீன்.
-->