இலங்கையில் சீனக் கப்பல் மீது தாக்குதல்: 18 பேர் பலி
கொழும்பு:
இலங்கையின் கிழக்குக் கடல் பகுதியில் சீனக் கப்பல் மீது பயங்கர தாக்குதல் நடந்தது. இதில் 18 சீனர்கள் கடலில் மூழ்கி இறந்தனர்.
விடுதலைப் புலிகள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று இலங்கை பாதுகாப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
உபாசு- யூ 225 என்ற அந்த சிறிய கப்பல் சுண்டிக்குளம் என்ற இடத்துக்கு 16 கி.மீ. தொலைவில் கடலில் சென்று கொண்டிருந்தபோது அதைபுலிகள் சுற்றி வளைத்து ராக்கெட்களால் தாக்கியதாக பாதுகாப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில் அந்தப் படகைத் தொடர்ந்துவந்த இன்னொரு சீனப் படகு தாக்குதலுக்கு உள்ளாகவில்லை.
தாக்குதலுக்கு உள்ளான படகு நடுக்கடலில் வெடித்துச் சிதறியது. இந்தப் படகில் மொத்தம் 27 சீனர்கள் இருந்தனர். இவர்களில் 18 பேர் நீரில்மூழ்கி இறந்துவிட்டனர். மற்ற 9 பேரையும் இரண்டாவது படகு மீட்டது. மீட்கப்பட்டவர்களில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர்மற்றவர்கள் அனைவரும் சீனர்கள் என்று தெரிகிறது.
எதற்காக இத் தாக்குதல் நடந்தது என்று தெரியவில்லை. இந்தப் படகுகள் இலங்கை மீன்வளர்ச்சித்துறைக் கழகத்திற்காக மீன் வளஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டதாக உயிர் தப்பிய சீனர்கள் கூறினர்.
இச் சம்பவம் குறித்து நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. புலிகள் தரப்பில் இருந்து இதுவரை இச்சம்பவம் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.