இலங்கை: அமெரிக்க மாநாட்டில் இந்தியா பங்கேற்பு
வாஷிங்டன்:
விடுதலைப்புலிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாத ஒரு அமெரிக்க மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாசம்மதித்துள்ளது.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும் இவற்றில் நேரிடையாகத் தலையிடுவதை இந்தியா தவிர்த்து வந்தது.
கடந்த நவம்பர் மாதம் நார்வேயில் நடைபெற்ற நிதி திரட்டும் மாநாட்டில் கூட பெயருக்கு மட்டுமே கலந்துகொண்டது இந்தியா. அதுவும் நார்வேயில் உள்ள பிற நாடுகளின் தூதர்களுக்கான இருக்கைகளில் ஒன்றில்இந்தியத் தூதர் உட்கார்ந்திருந்தார். அவ்வளவுதான்.
இந்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும் இலங்கை புனரமைப்பு விவகாரங்கள் தொடர்பாகவும்விவாதிப்பதற்காக வரும் 14ம் தேதி வாஷிங்டனில் ஒரு கூட்டம் நடைபெற உள்ளது.
அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ள இந்தக் கூட்டத்தில் நார்வே, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 30நாடுகள் கலந்து கொள்கின்றன.
இத்தனை நாடுகளுக்கும் அழைப்பு விடுத்த அமெரிக்கா இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு புலிகளுக்குமட்டும் அழைப்பு விடுக்கவில்லை. இதற்குப் புலிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் போதிலும் அமெரிக்கா இன்னும் புலிகள் மீதான தடையைநீக்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வாஷிங்டன் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியாவுக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்ததுஇதற்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.
புலிகள் கலந்து கொள்ளாததாலேயே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது. இந்தியாவிலும் புலிகள் மீதான தடை இன்னும் அமலில் உள்ளது.
அமெரிக்க துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ரிச்சர்டு ஆர்மிடேஜ் மற்றும் இலங்கை பொருளாதார சீரமைப்புத்துறை அமைச்சர் மிலிண்டா மொரகொடா ஆகியோர் இணைந்து வாஷிங்டன் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு நடவடிக்கைகள்தொடர்பாகவும், இதற்காக நிதி திரட்டுவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் ஜப்பானில் மற்றொரு பிரம்மாண்டமான நிதி திரட்டும் மாநாடுநடைபெற உள்ளது என்பது நினைவிருக்கலாம். ஆரம்பத்திலிருந்தே இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குமுழு ஆதரவு தந்து கொண்டிருப்பதோடு ஏராளமான நிதி உதவிகளையும் ஜப்பான் செய்து வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
சாய்பாபாவை சந்தித்தார் சந்திரிகா:
இதற்கிடையே இந்தியாவில் 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா நேற்று மாலை சாய்பாபாவைச் சந்தித்துப் பேசினார்.
பெங்களூர் அருகே உள்ள ஒயிட்பீல்டுக்குச் சென்ற சந்திரிகா அங்கு சாய்பாபாவைச் சந்தித்து அவரிடம் ஆசிபெற்றார். சுமார் 75 நிமிடங்கள் வரை இருவரும் சந்தித்துப் பேசினர். பின்னர் சந்திரிகா டெல்லி கிளம்பிச் சென்றார்.