ரஷ்யாவில் இந்தியர்களைக் கடத்திய பாகிஸ்தான் கும்பல்
மாஸ்கோ:
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் 9 இந்தியர்களை பாகிஸ்தானைச் சேர்ந்த கும்பல் கடத்திச் சென்றது. அவர்களை ரஷ்ய கமாண்டோபடையினரும் போலீசாரும் சேர்ந்து அதிரடித் தாக்குதல் நடத்தி மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக 2 பாகிஸ்தானியர்களை ரஷ்ய போலீசார் கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள துலா என்ற நகரில் இச் சம்பவம் நடந்தது. ரஷ்யாவின் பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சிமையங்களில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்திய அணு ஆராய்ச்சித்துறை, விமானப் படை, கடற்படை,ராணுவ அதிகாரிகளும் அங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கு உயர் கல்வியும் பயின்றுவருகின்றனர்.
இந் நிலையில் துலா நகரில் தங்கியிருந்த 9 இந்தியர்களை பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ரஷ்யக் கும்பல் கடத்திச் சென்றது.
இந்தக் கடத்தல் குறித்து அறிந்தவுடன் ரஷ்ய கமாண்டோ படைகளும் போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.கடத்தல்காரர்களும் பிணைக் கைதிகளான இந்தியர்களும் இருந்த வீட்டை அதிரடியாய்த் தாக்கிய ரஷ்யப் படையினர் இந்தியர்களைமீட்டனர்.
அவர்களை துப்பாக்கி முனையில் பாதுகாத்து வந்த மஹ்சூத் அஹ்மத் பட், காலித் நதீம் ஆகிய இரு ரஷ்யர்களைக் கைது செய்தனர்.இவர்கள் பாகிஸ்தான் வம்சாவளிச்ை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட இந்தியர்களின் அடையாளத்தைத் தர ரஷ்யா மறுத்துவிட்டது. இவர்கள் இந்திய ஆராய்ச்சியாளர்களாக இருக்கலாம் என்றுதெரிகிறது. கடத்தல் நடந்த தினம் குறித்தும், இவர்கள் மீட்கப்பட்ட நாள் குறித்தும் எந்த விவரத்தையும் ரஷ்யா தரவில்லை.
பாகிஸ்தான் கும்பல் பணத்துக்காகத் தான் இவர்களைக் கடத்தியதாகவும், இந்தக் கும்பல் மீது பல கடத்தல் வழக்குகள் விசாரணையில்இருப்பதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இந்த இந்திய ஆராய்ச்சியாளர்களை ரஷ்யாவில் இருந்து வெளிநாடுக்குக் கடத்த பாகிஸ்தான் கும்பல் திட்டமிட்டிருந்ததாக ரஷ்யஉளவுப் பிரிவு கூறியுள்ளது.