திருவாரூரில் தேரோட்டம் நடந்தது
திருவாரூர்:
புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டத் திருவிழா இன்று வெகு சிறப்பாகநடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
திருவாரூரில் உள்ள இந்தத் தேர்தான் தமிழகத்திலேயே மிகவும் பெரிய தேராகும். இந்தத் தேரின்உயரம் 96 அடி, அகலம் 64 அடி ஆகும். இந்தத் தேரின் மொத்த எடை 220 டன் (1 டன் என்பது1,000 கிலோ).
பக்தர்கள் இழுப்பதற்காகவே இந்தத் தேரில் 6 வடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தெருவளைவுகளில் தேர் திரும்புவதற்காக புல்டோசர் வண்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழகத்திலேயே இந்தத் தேர்தான் மிகவும் பெரியது என்பதாலேயே இந்நிகழ்ச்சி ஆழித்தேரோட்டம் என அழைக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தியாகராஜர் கோவில் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் ஒருபகுதியாக இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
லட்சக்கணக்கான பக்தர்கள் ஆழித் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தியாகராஜரை அழைத்துக்கோஷங்களை எழுப்பியவாறு பக்தர்கள் தேரை இழுத்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த பக்தர்கள் தேரோட்டத் திருவிழாவில் கலந்துகொண்டனர். திருவாரூரின் முக்கிய வீதிகளில் வலம் வரும் ஆழித் தேர் இன்று மாலை நிலையைஅடையும் என்று தெரிகிறது.
ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆயிரக்கணக்கான போலீசார் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தேரோட்டம் காரணமாக போக்குவரத்திலும் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
-->