எஜமானர் வீட்டில் நுழைந்த நல்ல பாம்பை கொன்றுவிட்டு உயிர்விட்ட நாய்
மதுரை:
மதுரையில் தனது எஜமானரின் வீட்டுக்குள் நுழைய முயன்ற மிகப் பெரிய நாகப் பாம்பை, அந்த வீட்டு நாய் கடித்துக் குதறிக் கொன்றது.நாகப் பாம்பு கொத்தியதில் அந்த நாயும் பலியானது.
திருமங்கலத்தைச் சேர்ந்த ஜெயக்குமார். இவர் விவசாயத்துறையில் உயர் அதிகாரியாக உள்ளார். தனது வீட்டில் அல்ஷேசன் ரக நாயைவளர்த்து வந்தார். கடும் வெப்பம் நிலவுவதால் வீட்டின் கதவைத் திறந்து வைத்து இவரது வீட்டினர் உறங்கிக் கொண்டிருந்தனர். நாய் வீட்டுவாசலில் கட்டிப் போடப்பட்டிருந்தது.
நேற்றிரவு நாய் குறைக்கும் சத்தம் கேட்டு ஜெயக்குமார் வீட்டினர் வெளியே ஓடி வந்தனர்.
அப்போது 5 அடி நீள நாகப் பாம்புடன் நாய் மிக பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தது. நாயை சுற்றி வளைத்து அந்த நாகப்பாம்கொத்திக் கொண்டிருக்க, அதை அந்த நாய் கடித்தவாரே வீட்டுக்குள் செல்ல விடாமல் அந்த நாய் தடுத்துக் கொண்டிருந்தது.
ஜெயக்குமார் வீட்டினர் எவ்வளவோ முயன்றும் கூட இந்த இரு பிராணிகளின் சண்டையை நிறுத்த முடியவில்லை. கிட்டத்தட்ட அரை மணிநேர சண்டைக்குப் பின் அந்த பாம்பை நாய் கொன்றது.
ஆனால், சிறிது நேரத்திலேயே நாயும் நுரை தள்ளி மயங்கி விழுந்தது. பாம்பிடம் உடலெங்கும் அந்த நாய் கொத்து வாங்கியிருந்தது. அதைமிருக நல மருத்துவரிடம் கொண்டு செல்வதற்கு முன் அந்த நாய் இறந்துவிட்டது.