தமிழக அமைச்சரவை நாளை மீண்டும் மாற்றம்: 3 பேருக்கு கல்தா- 5 பேர் சேர்ப்பு
சென்னை:
தமிழக அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்படவுள்ளது. புதிதாக 5 பேர் சேர்க்கப்படுகின்றனர். 3 பேர் நீக்கப்படுகின்றனர்.
செய்தித் தொடர்புத்துறை துறை அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வடிவேலு, பிற்பட்டோர் நலத் துறை அமைச்சர் பாப்பா சுந்தரம் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
முன்பு அமைச்சரவையில் இடம் பெற்று பின்னர் நீக்கப்பட்டிருந்த தளவாய் சுந்தரம் மற்றும் பாண்டுரங்கன் ஆகியோருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் தரப்படவுள்ளது. தளவாய்க்கு நலத்துறை வழங்கப்படுகிறது. பாண்டுரங்கனுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்படுகிறது.
தாமரைக்கனியின் மகன் இன்பத் தமிழனும் அமைச்சராகிறார். அவருக்கு விளையாட்டுத் துறை வழங்கப்படுகிறது. இவர்கள் தவிர அன்பழகன், அண்ணாவி ஆகியோரும் அமைச்சர்களாகின்றனர். இதில் அன்பழகனுக்கு செய்தித் தொடர்புத்துறையும், அண்ணாவிக்கு பிற்பட்டோர் நலத்துறையும் தரப்படுகிறது.
நலத்துறையும் விளையாட்டுத்துறையும் இதுவரை அமைச்சர் செம்மலையிடம் இருந்தன. இனி அவர் கல்வியமைச்சராக மட்டும் தொடர்வார்.
மேலும் இதுவரை அமைச்சர் நைனார் நாகேந்திரனிடம் இருந்த மின்சாரத்துறை மீண்டும் சட்ட அமைச்சர் ஜெயக்குமாரிடம் தரப்படுகிறது.
இன்று மாலை திடீரென கவர்னர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா இந்த புதிய அமைச்சர்கள் பட்டியலைத் தந்தார். நாளை இவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி பிற்பகலில் நடக்கிறது.